மீண்டும் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்த விஜய் தேவரகொண்டா.. மம்மி வில்லனுடன் மிரட்டும் ரணபலி க்ளிம்ப்ஸ்!
ஹைதராபாத்: நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள, இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படத்தின் முதல் பார்வை (Glimpse) வெளியாகி உள்ளது. முன்னதாக 'VD 14' என அழைக்கப்பட்ட இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் 2026 செப்டம்பர் 11 அன்று 'ரணபலி' வெளியாகும்.
வெளியான முதல் பார்வை, பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரமான காலக்கட்டத்தை அழுத்தமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வெள்ளையர்களின் திட்டமிட்ட சூழ்ச்சிகளால் வறண்டுபோன பகுதிகளில் மக்கள் சந்தித்த இன்னல்களையும், சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற அதிகாரிகளின் கொடுமைகளையும் அது உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகளையும், இந்தியாவின் பொருளாதாரச் சுரண்டலையும் இந்த முதல் பார்வை காட்சிப்படுத்துகிறது.

'ரணபலி' கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா வலிமையான, அதிரடியான புதிய தோற்றத்தில் ரசிகர்களைக் கவரும் வகையில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். புகழ்பெற்ற 'தி மம்மி' திரைப்படத்தில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ, வில்லன் சர் தியோடோர் ஹெக்டர் வேடத்தில் மிரட்டுகிறார். குறிப்பாக, ரயில் பாதையில் பிரிட்டிஷ் அதிகாரியை விஜய் தேவரகொண்டா குதிரையில் இழுத்துச் செல்லும் காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை டி-சீரிஸ் வழங்குகிறது. பிரிட்டிஷ் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட இது, 19 ஆம் நூற்றாண்டில் 1854 முதல் 1878 வரை நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் டிராமாவாக 'பான் இந்தியா' அளவில் உருவாகியுள்ளது.
'ரணபலி' திரைப்படம், 1850 களில் நடந்த ஆனால் பாடப்புத்தகங்களில் இடம்பெறாத உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணர்கிறது. 1850-1900 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் திட்டமிட்டுத் திரித்துக்கூறப்பட்ட நிகழ்வுகளையும், தவறாகப் பழிசுமத்தப்பட்ட மனிதர்களையும் இப்படம் பேசுகிறது. இது வெறும் வாழ்க்கை வரலாற்றுப் படமோ, அல்லது பாடநூல் வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியோ அல்ல. மாறாக, வாய்மொழி வரலாறுகள், உண்மைச் சான்றுகள், மற்றும் ஒடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மறைக்கப்பட்ட ஒரு காலத்தை சினிமா வடிவில் மீளுருவாக்கம் செய்யும் முயற்சி இது.
'டியர் காம்ரேட்', 'குஷி' படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் மூன்றாவது படம் இது. 'டாக்ஸிவாலா' வெற்றியின் பின்னர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இணைந்துள்ள இரண்டாவது படைப்பு 'ரணபலி'. மேலும், 'கீத கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வோஸ்லூ உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அஜய்-அதுல் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரமோத் தம்மினேனி கதை எழுதியுள்ளார். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் ஆர் படத்தொகுப்பு பணிகளையும், யானிக் பென், ஆண்டி லாங் நுயென், ராபின் சுப்பு ஆகியோர் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











