Vijay - தளபதி டூ தமிழக வெற்றிக் கழக தலைவர்.. திரைத்துறையில் 40 வருடங்களை நிறைவு செய்த விஜய்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.
ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.

அசிங்கப்பட்ட விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை எவற்றையுமே தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார்.
அரசியல் ஆசை: எந்த நேரத்தில் விஜய் குடும்பங்களை கவரும் ஹீரோவாக இருக்க வேண்டும், எந்த நேரத்தில் கமர்ஷியல் பாதையில் பயணிக்க வேண்டும் என எஸ்.ஏ.சி விஜய்யின் வளர்ச்சியை செதுக்கினார் என்றே சொல்லலாம். ஒருகட்டத்தில் கமர்ஷியலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த விஜய்க்குள் அரசியல் ஆசையை விதைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஐடியாவில்தான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றமாக மாறி மக்கள் இயக்கமாக பரிணமித்தது.
மாணவர்களுடன் சந்திப்பு: அதேபோல் 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்தார் மேலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொன்னதும் அரசியலுக்கான பாதைதான் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. மேலும், தனது மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு செயலையும் அரசியல் நோக்கியே நகர்த்துகிறார் விஜய் என்றும் பெரும்பாலானோரால் எண்ணப்பட்டது.
அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
GOAT: சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறார். சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
கோட்டைக்கு செல்வாரா?: விஜய்யை எப்படியாவது கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் அவரது தொண்டர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர். அதற்கான பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கியிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க திரைத்துறைக்கு வந்து விஜய் 40 வருடங்களை நிறைவு செய்கிறார். இளைய தளபதியாக இருந்து தளபதியாக வளர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய் இந்த 40 வருடங்களில் ஏகப்பட்ட முறை மக்களை எண்ட்டெர்டெயின் செய்திருக்கிறார். தற்போது மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











