அம்மா முதல்வராக இருப்பது சினிமா கலைஞர்களுக்கு கவுரவம்: விஜய் பேச்சு
சென்னை: பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும்
தான் என்று நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
விழாவுக்கு இளையதளபதி விஜய் வருவாரா, மாட்டாரா என்று இருந்தது. விழாவுக்கு விஜய்
அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் விஜய் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார்.

சண்டை கலைஞர்கள்
சினிமா 100 ஆண்டுகள் ஆனாலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். உழைப்பாளிகள் வியர்வை
சிந்தி உழைப்பவர்கள். சண்டை கலைஞர்களோ ரத்தம் சிந்த உழைப்பவர்கள். எதிர்பாராமல் நடப்பது
விபத்து. ஆனால் விபத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் சண்டை கலைஞர்கள் என்று விஜய்
தெரிவித்தார்.

மறக்க முடியாது
ஒரு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் ஆபத்தான காட்சியில் நடித்ததை அவரது மனைவியும்,
மகளும் கண்ணீர் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாங்க. அந்த காட்சியை என்னால மறக்கவே முடியாது
என்று விஜய் கூறினார்.

கலங்கிட்டேன்
மற்றொரு ஸ்டண்ட் கலைஞர் நெருப்பில் காரை ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும். அவர் அந்த
காட்சியில் நடிக்கும் முன்பு தனது மகளிடம் போனில் பேசிவிட்டு வந்தார். ஏன் என்று
கேட்டதற்கு காட்சி முடிந்த பிறகு என்னால் பேச முடியுமோ முடியாதோ அதனால் தான் என்றார்.
அவர் சொன்னதை கேட்டு அப்படியே கலங்கிவிட்டேன் என்று விஜய் பேசினார்.

சல்யூட்
படத்தில் நீங்கள் கை தட்டி ரசிக்கிற ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சில
காயங்கள், சில வலிகள், ஏன் சில மரணங்கள் கூட உள்ளது. தீயை அணைப்பவர்களை வீரர்கள்
என்கிறோம். அப்படி என்றால் தீயோடு விளையாடும் ஸ்டண்ட் கலைஞர்களை எப்படி அழைப்பது?.
அவர்களுக்கு என்னுடயை சல்யூட் என்றார் விஜய்.

நடிகை நாடாள்கிறார்
அம்மா தலைமையில் இந்த சினிமா நூற்றாண்டு விழா நடப்பது நமக்கெல்லாம் கவுரவம். ஒரு
நடிகையாக வாழ்க்கையைத் துவங்கி, எதிர்ப்புகள், சவால்களை எல்லாம் முறியடித்து ஒரு நடிகை
நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டுமே. இது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களுக்கு
கவுரவமான விஷயம் என்று விஜய் பேசினார்.


Click it and Unblock the Notifications











