அந்த டயலாக்கே கலைஞர் எழுதுனது.. பஞ்ச் டயலாக் சொன்ன விஜய்.. பஞ்சராக்கும் ரசிகர்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; திமுகவை காத்திரமாக எதிர்த்துவருகிறார். சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தின்போது எம்ஜிஆர் நடித்த மர்மயோகி திரைப்படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனத்தை பேசி; தான் அதுபோல்தான் நடந்துகொள்வேன் என்று கூறியிருந்தார். அவர் அப்படி பேசியிருந்தது அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக அமைந்தது. ஆனால் அவருக்கு எதிர் தரப்பினர் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
அரசியல் பிரவேசம் செய்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். கண்டிப்பாக அவர் திமுகவுடன் இணைவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்; அக்கட்சியைத்தான் காத்திரமாக எதிர்த்துவருகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்க்கிள் என்று சொன்னது; பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருக்கிறது திமுக என விட்டு விளாசிவருகிறார். அவருக்கு திமுகவினரும் பதிலடி கொடுத்தார்கள்.
கரூர் துயர சம்பவம்: இப்படிப்பட்ட சூழலில் கரூருக்கு சென்று மக்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்புக்கு விஜய்தான் முழு பொறுப்பு என்று திமுகவினர் மட்டுமின்றி பொதுவானவர்களும் கூறினார்கள். தன் தவறை விஜய் உணர்வார் என்று நினைத்தால்; அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

மீண்டும் கிளம்பிய விஜய்: அந்த சம்பவத்தால் மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்திருந்த அவர்; சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கினார். அதன்படி காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடந்த அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல் திமுகவை கடுமையாக சாடினார். அதிலும், 'அண்ணா உருவாக்கிய அந்தக் கட்சி மீது எனக்கு எந்த வன்மமும் இல்லை. ஆனால் அவர்களுக்குத்தான் நம் மீது வன்மம் இருக்கிறது' என கூறினார்.
தற்குறி இல்லை ஆச்சரியக்குறி: அதுமட்டுமின்றி தங்களை தற்குறி என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 'நாங்கள் தற்குறிகள் இல்லை. ஆச்சரியக்குறிகள். இந்த விஜய்யை ஏன் டா தொட்டோம் என்று வருத்தப்படுவீர்கள்' என பேசிய அவர், 'மர்மயோகி படத்தில் எம்ஜிஆர் ஒரு வசனம் பேசுவார். நான் குறி வைத்தால் தவறமாட்டேன். தவறினால் குறியே வைக்கமாட்டேன் என்று. அப்படித்தான் நானும்' என பஞ்ச்சும் பேசியிருந்தார்.
விமர்சிக்கும் ரசிகர்கள்: அவர் அப்படி பேசியது விஜய்யின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் திமுகவை எதிர்க்கிறேன் என்று சொல்லும் விஜய்; அந்தக் கட்சியின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தையே பேசியிருக்கிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவருக்கு பெரிய புரிதல் இல்லை என்பதை என விளாசிவருகிறார்கள். மேலும், திமுகவை எதிர்ப்பதற்கு திமுக தலைவர் எழுதிய வசனத்தையே விஜய் பயன்படுத்துகிறார் என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் கைத்தட்டி விசில் அடிக்கிறார்களே; இதெல்லாம் கொடுமை என்றும் பேசிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











