விஜய் சேதுபதி நடிக்க ஆசைப்படும் படம் இதுதான்.. அவரே சென்று வாய்ப்பு கேட்பாராம்
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்தவகையில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.
இனி ஹீரோதான்: இதற்கிடையே அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சேதுவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அந்தவகையில் கடைசியாக மகாராஜா படத்தில் நடித்திருந்தார்.
மெகா ஹிட்: அந்தப் படத்தை நித்திலன் இயக்க, விஜய் சேதுபதியுடன் நட்டி, அபிராமி, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் செம வரவேற்பை பெற்றது. முக்கியமாக நான் லீனியர் ஜானரில் நித்திலன் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் ஆசை: இந்நிலையில் விஜய் சேதுபதி அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில், "ஹிந்தியில் எனக்கு ஏக் ஹசீனா தி, பட்லப்பூர், அந்தாதூன் படங்கள் பிடிக்கும். இவற்றில் பட்லப்பூர் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்தப் படத்தின் கதை மற்றும் காட்சிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்தப் படத்தை தமிழில் யாராவது ரீமேக் செய்தால் அந்தப் படத்தில் நடிப்பதற்கு நானே சென்று வாய்ப்பு கேட்பேன்" என்றார். பட்லப்பூர் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியானது. ஸ்ரீராம் ராகவன் தான் மெரி கிறிஸ்துமஸ் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











