அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு.. வருத்தப்பட்ட விஜய் சேதுபதி.. எந்தப் படம் தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கிவருபவர். முக்கியமாக ஹிந்தி மொழிக்கு இங்கிருந்து சென்று வெற்றி பெற்ற மிகச்சில நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் ட்ரெய்ன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். இந்நிலையில் சேதுபதி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து ஹீரோவாக மாறியவர் விஜய் சேதுபதி. வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். முக்கியமாக அவரது ஒளிவு மறைவு இல்லாத பேச்சு, எதார்த்தமான நடவடிக்கைகள் என அவரிடம் ஏராளமான விஷயங்களை ரசிகர்கள் ரசிப்பார்கள். அதிலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்தக் காலத்திலும் அடம் பிடிக்காமல் கதைக்கு தேவையாகவும்; தனக்கு ஸ்பேஸும் இருந்தால் எந்த ரோலாக இருந்தாலும் நடிப்பவர்.

வில்லன் விஜய் சேதுபதி: அந்தவகையில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லனாக கலக்கியவர். அதேபோல் ஹிந்தியில் ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டினார். ஹிந்தியில் வில்லனாக மட்டுமின்றி ஃபர்ஸி வெப் சீரிஸில் முக்கியமான ரோலிலும், மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இங்கிருந்து ஹிந்திக்கு சென்று நடிப்பில் வென்று காட்டிய மிகச்சில நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஹிந்தி படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஹீரோ: விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தார்கள். அவர்களின் ஆசைப்படி அவர் இப்போது மீண்டும் கதாநாயகனாக மாறியிருக்கிறார். கடைசியாக அவர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமான மகாராஜா படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. எனவே ட்ரெய்ன் படத்தில் இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சேது. அப்போது அவரிடம், 'நீங்கள் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் போகும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. இதற்கு முன்னர் எனக்கு நடந்தது எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. அதுவாகவே நடந்தது. அதுபோல் இதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே அஜித்துடன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் வேண்டாம்" என்றார்.
விஜய் சேதுபதி இப்படி சொல்லியதைத் தொடர்ந்து எந்தப் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னதாக, அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக சேதுபதியை நடிக்க வைக்கத்தான் விக்கி திட்டமிட்டிருந்ததாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது. ஒருவேளை விஜய் சேதுபதி கூறுவது அந்தப் படமாகத்தான் இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











