அவர்கள்தான் என்னை அதிகாரம் செய்வார்கள்.. விஜய் சேதுபதி என்ன இப்படி ஓபனாக பேசிட்டாரு!
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா, விடுதலை 2 திரைப்படங்கள் வெளியாகின. அவரது 50ஆவது திரைப்படமான மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி சீனாவிலும் படம் இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் ஹரி இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
கோலிவுட்டின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்த அவர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்ததாக அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,சூதுகவ்வும், பீட்சா என்று வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழிகளிலும்: ஒருபக்கம் கமர்ஷியல் ஆக்டிங்கில் பட்டையை கிளப்பிய அவர் மறுபக்கம் சோதனை முயற்சிகளிலும் இறங்கினார். அதேபோல் நட்புக்காக ரம்மி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். ஆனால் அதுதான் தான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்பதையும் பின் நாட்களில் அவர் கூறினார் என்பது நினைவுகூரத்தக்கது. தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும்கூட தனது தடத்தை பதித்தார். அப்படி அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றன.
வில்லன் சேது: ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவர் கலக்கிவந்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ரொம்பவே மிரட்டலாக செய்திருந்தார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிக்கக்கூடாது ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றும் விதமாக இனி ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறி அப்படியே நடிக்கவும் செய்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக மகாராஜா, விடுதலை 2 திரைப்படங்கள் வெளியாகின.
இரண்டுமே ஹிட்: இரண்டு படங்களுமே அவருக்கு பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தன. முக்கியமாக மகாராஜா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. உலகளவிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சீனாவில் அந்தப் படம் வசூல் வேட்டை நடத்தியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் தனது குழந்தைகள் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நான் எனது மகன் சூர்யாவை அப்பா என்றும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும் அழைப்பேன்.
அதிகாரம் செய்வார்கள்: ஆனால் அவர்களோ என்னை அதிகாரம் செய்வார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்பதை தினமும் எனது பிள்ளைகளிடம் சொல்வேன். எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் காது கொடுத்து கேட்பேன். எனது குழந்தைகளிடம் நான் ஒரு அப்பா என்ற பிம்பத்தை மட்டும் உருவாக்க நினைப்பதில்லை. சொல்லப்போனால் நான் அவர்கள் முன்பு ஒரு குழந்தைதான்" என்றார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஃபீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











