தீய சக்திகளை அழிக்க திருச்செந்தூரில் பூஜை.. நாளை விஜய் போகும் கோயில் தெரியுமா?
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் களமிறங்கினார். மேலும் 231 தொகுதிகளில் தவெகவினர் போட்டியிட்டனர். இவர்கள் வென்று ஆட்சியை பிடிப்பார்களா? இல்லை வாக்குகளை பிரித்தார்களா? என்பது மே நான்காம் தேதி தெரிந்துவிடும். தேர்தல் ரிசல்ட் நெருங்கும் வேளையில் கோயில் கோயிலாக சென்றுவருகிறார் விஜய். அந்தவகையில் இன்று அவர் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு அரசியல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தகித்தது. காரணம் நான்கு முனை போட்டி. அந்தப் போட்டியில் விஜய்யின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு காத்திருக்கிறது. திருச்சி கிழக்கிலும், பெரம்பூரிலும் களம் கண்டிருக்கும் விஜய்; ஒரு தொகுதியிலாவது வென்றுவிட வேண்டும் என்பது தவெகவினரின் கணக்கு. அதேபோல் ஆட்சியையும் பிடிப்போம் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையிலும் சிலர் இருக்கிறார்கள்.

வாக்குகள் பிரியுமா?: ஆனால் இந்தத் தேர்தலில் தவெக வெல்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் அரசியல் அனுபவஸ்தர்களின் கணக்காக இருக்கிறது. தவெகவால் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும்; வாக்குகளை கண்டிப்பாக பிரித்திருக்கும் என்றும் சொல்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள், கல்லூரி மாணவ, மாணவிகளின் வாக்குகள் பெருமளவு விஜய் கட்சிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக விஜயகாந்த் முதல் தேர்தலில் வாங்கிய 8 விழுக்காடு வாக்குகளைவிடவும் தவெக வாங்கும் எனவும் ஒரு கணிப்பு ஓடுகிறது.
கோயிலில் தரிசனம்: தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்றன. அனைவருமே அன்றைய நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க விஜய்யோ தேர்தல் முடிந்த பிறகும் ஆக்டிவ்வாக இருக்கிறார். நேற்று தனது வீட்டில் வைத்து சிலரை சந்தித்தார். அடுத்ததாக இன்று திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வழக்கம்போல் அவரை பார்ப்பதற்கு கூட்டம் அதிகளவு கூடியது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
திருச்செந்தூரில் பூஜை: திருச்செந்தூரில் அவர் சத்ரு சம்ஹார பூஜை செய்ததாக கூறப்படுகிறது. தீய சக்திகளை அழித்து, வழக்கு தொல்லைகள் மற்றும் நோய்களிலிருந்து தப்பிக்க இந்த பூஜை செய்யப்படும் என ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். விஜய் மட்டுமின்றி அரசியல் கணக்குக்காக ஏகப்பட்ட அரசியல்வாதிகள் திருச்செந்தூரில் அந்த பூஜையை செய்திருக்கிறார்கள் எனவும் ஒரு தகவல் ஓடுகிறது. இந்த பூஜையை செய்த பிறகு விஜய் ரொம்பவே உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் காணப்படுகிறாராம்.
நாளை எந்த கோயில்?: இன்று திருச்செந்தூர் சென்று பூஜை செய்த விஜய் நாளை ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு காலை 10.30 மணி அளவில் செல்லவிருக்கிறார். ஷீரடி கோயிலுக்கு சென்று தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளவிருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு இப்படி கோயில் கோயிலாக செல்லும் விஜய்யை பார்த்து அனைவருமே ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். எதிர் தரப்பினரோ, விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் எனவும் விமர்சிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications