ரஜினி சிகிச்சைப் பெற்ற அதே மருத்துவமனையில் விஜயகாந்த், அம்பரீஷுக்கு சிறுநீரக சிகிச்சை!!
சென்னை: சிறுநீரகக் கோளாறுக்காக ரஜினிகாந்த் சிகிச்சைப் பெற்ற சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று இரு பிரபல அரசியல்வாதிகள் சேர்ந்துள்ளனர்.
ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அடுத்தவர் கன்னட நடிகரும் அம்மாநில அமைச்சருமான அம்பரீஷ்.

மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை
சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையான மவுன்ட் எலிசபெத், சிறு நீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலகப் புகழ் பெற்றது. மிக சிக்கலான நோயையும் துல்லியமாகக் கணித்து சிகிச்சை தருவதில் நிபுணத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

ரஜினிகாந்த்
2011-ல் ரஜினிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டபோது, அவருக்கு இந்த மருத்துமனையில் வைத்துதான் சிகிச்சை அளித்தனர். அவருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பரிந்துரைத்தார். இரண்டே மாதங்களில் ரஜினி நலம்பெற்று வந்தார்.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டதால், சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். உடன் அவர் மனைவியும் சென்றிருந்தார். மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், ஒரு மாதத்துக்குள் அவர் சிகிச்சைப் பெற்றாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்பரீஷ்
இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் இன்னொரு அரசியல் - சினிமா பிரமுகர் அம்பரீஷ். ரஜினியின் ஆப்த நண்பர்களில் ஒருவர். இவருக்கும் நுரையீரல் நோய்த் தொற்று மற்றும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

ரஜினி அறிவுரை
பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் செல்லுமாறு ரஜினி அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, விஜய்காந்த் தனக்கான சோதனைகள் முடிந்து இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











