தரணி, கவுதம் மேனன் படங்களில் நடிக்கும் விக்ரம்!
சென்னை: ஷங்கரின் ஐ படம் முடிந்த பிறகு தரணி மற்றும் கவுதம் மேனன் படங்களில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
சேது படத்துக்குப் பிறகு வரிசையாக ஹிட் கொடுத்தவர் விக்ரம். ஆனால் அந்நியன் படத்துக்குப் பிறகு, விக்ரம் தன் ஒவ்வொரு படத்துக்கும் எக்கச்சக்க அவகாசம் எடுத்துக் கொண்டார். இத்தனைக்கும் அந்நியன் ஓரளவு நல்ல வெற்றிப் படமே.
தொடர்ந்து வந்த பீமா, கந்தசாமி போன்ற படங்கள் வெளியாக தலா இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டன.

ஐ
இயக்குநர் விஜய்யுடன் இணைந்து தெய்வத் திருமகள் என்ற வெற்றியையும், தாண்டவம் என்ற தோல்வியையும் தந்த பிறகு மீண்டும் மெகா இயக்குநர் ஷங்கருடன் இணைந்துள்ளார், ஐ படத்துக்காக. இந்தப் படம் 75 சதவீதம் முடிந்துவிட்டது.

அடுத்து தரணி..
இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் தரணியுடன் இணைகிறார். ஏற்கெனவே தில், தூள் என இரு சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இணை இது. இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

கவுதம் மேனனுடன்...
இந்தப் படத்தில் நடிக்கும்போதே, கவுதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்துள்ளார் விக்ரம். சூர்யா நடிப்பதாக இருந்து, நின்று போயிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தைத்தான் இப்போது விக்ரமுக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதியுள்ளாராம் கவுதம். இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கப் போகிறவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்ததைச் சாதித்த த்ரிஷா
துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா விரும்பினார். அதுவே கவுதம் மேனன் விருப்பமாகவும் இருந்தது. அங்குதான் அத்தனைப் பிரச்சினையும் ஆரம்பித்தது. படத்திலிருந்து சூர்யாவே விலகிவிட்டார். ஆனால் அந்தப் படத்தில் த்ரிஷா மட்டும் தொடர்கிறார். இப்போது ஹீரோவாக விக்ரம் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











