வீர தீர சூரன் ஓகே.. விக்ரமின் அடுத்த பட டைட்டிலும் இது மாதிரியா?.. வீரத்தை விடமாட்றாரே!
சென்னை: விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சில சிக்கல்களை கடந்து மார்ச் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல கஷ்டங்களை கடந்து இன்று ஒரு நிலையான இடத்துக்கு வந்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே எளிதாக மாறிவிடக்கூடிய அவர் பிதாமகன் படத்துக்காக தேசிய விருதினையும் வென்றார். அதேபோல் தில், தூள், சாமி, ஜெமினி என கமர்ஷியல் ரீதியாக மெகா ஹிட் படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். முக்கியமாக மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விக்ரமுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி 99 சதவீதம் யாரிடமும் வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பவர் அவர்.
தங்கலான் விக்ரம்: ஆனால் விக்ரம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அவருக்கு கடந்த சில வருடங்களாக கமர்ஷியலாக ஒரு ஹிட் கிடைக்கவில்லை. அவரும் ஸ்கெட்ச், இருமுகன் என கமர்ஷியல் படங்களிலும் பொன்னியின் செல்வன், தங்கலான் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களிலும் நடித்து பார்த்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிடைத்து பல வருடங்கள் ஆகியிருந்தன. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்கள்.

வீர தீர சூரன்: இப்படிப்பட்ட சூழலில் சித்தா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அருண்குமாருடன் இணைந்தார். இதில் அவருடன் சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவான இந்தப் படம் ரிலீஸ் தேதியன்று சிக்கலை சந்தித்தது. அதாவது பி4யு என்கிற நிறுவனம் படத்தின் தயாரிப்பு தரப்புக்கு நிதியுதவி கொடுத்திருக்கிறது. அதற்கு மாற்றாக இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அந்த நிறுவனத்துக்கு எழுதி தருவதாக தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டிருந்தார்.
தடை விதித்த நீதிமன்றம்: ஆனால் ஓடிடி உரிமத்தை விற்காமலேயே படத்தை வெளியிடுவதாகவும்; அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமோ படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்தது. பிறகு அப்பிரச்னை ஒருவழியாக முடிந்ததால் படமானது மார்ச் 27ஆம் தேதி மாலைதான் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஓரளவு திருப்தியைத்தான் அடைந்தார்கள்.
படம் ஹிட்தான்: படத்தில் விக்ரமுக்கு ஏகப்பட்ட மாஸ் காட்சிகள் இருக்கின்றன. இப்படி ஒரு விக்ரமை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. அதேபோல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு டீசன்ட்டான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் மொத்தமாக இதுவரை 20 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த படத்தின் டைட்டில்: சூழல் இப்படி இருக்க அடுத்ததாக விக்ரம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வந்தது. தற்கால இயக்குநர்களில் மடோன் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு வீரமே ஜெயம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











