ஆமா யார் நீங்க?.. உங்களை தெரியாது?.. சிம்புவை இன்சல்ட் செய்த விராட் கோலி.. என்ன நடந்தது?
சென்னை: சிம்பு தமிழ் சினிமாவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர். இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்தாக ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தக் லைஃப் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார் எஸ்டிஆர்.
எஸ்டிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு ஃபுல் ஃபார்மில் சினிமாவில் இருந்தார். ஆனால் இடையில் அவரது பெர்சனல் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவரது எண்ணத்தை சினிமாவில் முழுதாக வைக்கவிடாமல் தடுத்தது. மேலும் உடல் எடையும் கூடினார். அந்த சமயத்தில் அவர் நடித்த செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவதான் வருவேன் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. அதனையடுத்து அனைத்தையும் சரி செய்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
வரிசையாக ஹிட்டுகள்: அதன்படி மாநாடு திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இப்படி இரண்டு ஹிட்டுகள் கொடுத்த சிம்புவை பார்த்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள்.

அடுத்தடுத்த படங்கள்: இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக இளம் இயக்குநர்களான தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று இயக்குநர்களுமே தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் சென்சேஷனலாக இருப்பவர்கள். எனவே இவர்கள் சிம்புவுடன் சேர்ந்து கண்டிப்பாக தரமான சம்பவம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
ப்ரோமோஷனில் சிம்பு: தேசிங்கு பெரியசாமியுடனான படத்தை முதலில் கமல்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலகிக்கொள்ள சிம்புவே அப்படத்தை தயாரிக்கிறார். படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரின் படங்களுடைய ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிம்பு சுற்றி சுழன்றுவருகிறார். அப்படி ஒரு ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது விராட் கோலியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
சிம்பு சொன்னது: அவர் பேசுகையில், "விராட் கோலி இந்தியாவுக்கு விளையாட ஆரம்பித்தபோது, இவர்தான் அடுத்த சச்சினாக வருவார் என்று எனது நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அவர்களோ, அதெல்லாம் இல்லை. அவர் ரொம்ப அக்ரெஸிவாக இருக்கிறார். இன்னும் இரண்டு வருடங்களில் காணாமல் போய்விடுவார் என்று கூறினார்கள். ஆனால் அதன் பின்பு கோலி எந்த நிலைக்கு வந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருமுறை அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த அவமானம் தேவையா?: உடனே நான் எனது மனதுக்குள், 'நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என கணித்திருந்தேன் பார்த்தீங்களா' என்று நினைத்துகொண்டு அவரிடம் சென்று, 'வணக்கம் நான் சிம்பு' என்று கூறினேன். அதற்கு அவரோ, 'யார் நீங்கள். உங்களை எனக்கு யார் என்றே தெரியாது' என சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கோ, 'இந்த அவமானம் தேவையா?" என்று தோன்றியது. மேலும் என்னையா தெரியாது என்று சொல்கிறீர்கள். ஒருநாள் நான் யார் என்று உங்களுக்கு தெரிய வைப்பேன் எனவும் நினைத்துக்கொண்டேன். இப்போது என்னுடைய படத்தில் இடம்பெற்ற நீ சிங்கம்தான் பாடல் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். என்னை தெரியாது என்று சொன்னவருக்கு என்னுடைய பாடல் பிடித்திருக்கிறது என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். முன்னதாக ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற, 'நீ சிங்கம்தான்' பாடல்தான் சமீபத்தில் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று என்று கோலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











