அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்திய விஷால்
நடிகர் விஷால் இப்போது நடிகர் சங்கத்தின் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதற்காகப் பலரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்பான வேலைகளின் நடுவேயும் சமூகப் பணிகளிலும் சேவைகளிலும் அவர் கவனம் செலுத்தத் தயங்குவதில்லை.
நேற்று மதுரவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து பரிசுகள் கொடுத்து பாராட்டி ஊக்கப் படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு விரிவாகச் செய்திருந்தார்.
அதன்படி அந்தப் பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்த மாணவர்கள் 40 பேருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
மாணவர்களிடையே விஷால் பேசும் போது, "நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். நானும் உங்களைப் போல அரசுப் பள்ளியில் படித்தவன்தான். படிப்படியாக படித்துதான் லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். பிறகு கஷ்டப்பட்டுத்தான் சினிமாவில் நடித்து முன்னேறியுள்ளேன்.
உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துத் தர கல்வியால் மட்டுமே முடியும். கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும்.நன்றாக படியுங்கள். முன்னேறலாம். இந்த பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டுகிறேன். அனைவரும் அதிக மதிப்பெண் எடுக்க முயல வேண்டும். என்னால் வளர முடிகிற போது உங்களாலும் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்,'' என்று ஊக்கமூட்டினார்.
"சினிமா நடிகர்கள் எல்லாம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் போல ஆடம்பரமான தனியார் பள்ளிகளுக்குத் தான் செல்வார்கள். நீங்கள் இங்கு அரசுப் பள்ளிக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று நன்றி தெரிவித்தனர் மாணவர்கள்.


Click it and Unblock the Notifications















