உலகம் முழுக்க போய் சேரணும்.. அதுக்கு இப்படி பண்ணனும்.. விஷால் செய்த குசும்ப பார்த்தீங்களா?
சென்னை: விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மதகஜராஜா கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 12 வருடங்கள் கழித்து அந்தப் படம் வந்தாலும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதேபோல் விஷாலுக்கு கடைசியாக வெளியான மூன்று படங்களில் ரத்னம் படம் தவிர்த்து மார்க் ஆண்டனியும், மதகஜராஜாவும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் விஷால் பேசிய விஷயம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே ஹிட் எதுவும் கிடைக்காமல் இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். ஏற்கனவே ஆதிக் இயக்கிய திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. இதனால் மார்க் ஆண்டனி மீதும் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் விஷால் நம்பிக்கை வைத்து நடித்தார். படமும் மெகா ஹிட்டானது.

100 கோடி ரூபாய் வசூல்?: டைம் ட்ராவல் ஜானரில் அந்தப் படம் உருவாகியிருந்தது. அந்த ஜானரில் வெளியானாலே படம் ஹிட்டாகும் என்பதற்கேற்ப மார்க் ஆண்டனியும் ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா பொங்கலுக்கு ரிலீஸானது.
12 வருடங்களுக்கு பிறகு: கடந்த 2012ஆம் ஆண்டு இந்தப் படத்தை உருவாக்கினார் சுந்தர்.சி. இதில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, நிதின் சத்யா, சடோகபன் ரமேஷ், சாமிநாதன் என ஏராளமானோர் நடித்திருந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு படம் ரிலீஸாவதால் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை படம் அடித்து நொறுக்கியது. படம் முழுக்க ரசிகர்களை சுந்தர்.சி சிரிக்க வைத்திருந்தார். இதனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
செம வசூல்: விமர்சன ரீதியாக பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் படமானது 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறதாம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். ஆனால் அது வைரல் காய்ச்சலால் வந்தது என்று விஷாலின் மருத்துவர் கூறினார்.
விஷாலின் குசும்பு: இந்நிலையில் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், 'ஒரு நிமிடம் மறந்துவிட்டேன்' என்று சொல்லி மைக்கை வாங்கி கைகளை நடுங்கும்படி ஆட்டினார். பிறகு இப்போதெல்லாம் இப்படி செய்தால்தான் வீடியோ உலகம் முழுக்க சென்று சேர்கிறது என தெரிவித்தார். முன்னதாக படத்தின் ரிலீஸுக்கு பிறகு செய்தியாளர்களை ஒருமுறை சந்தித்த அவர், எனது கைகள் நடுங்கிய வீடியோ ரொம்பவே ட்ரெண்டாகியிருந்தது. பலரும் எனக்கு ஃபோன் செய்து உடல்நிலையை விசாரித்தார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











