முதல் மனைவிக்கு புற்றுநோய்.. கலங்கினேன்.. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.. விஷ்ணு விஷால் ஓபன்
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் இரண்டு வானம், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் தனது முதல் மனைவி குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
சூப்பர் ஹிட்டான இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார்.இதனால் அவர் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார். அதேபோல் அவருக்கு ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய படங்களும் ஹிட்டாகின. ஆனால் கடைசியாக நடித்த லால் சாலாம் தோல்வியடைந்தது.

இரண்டு திருமணங்கள்: இதற்கிடையே அவர் முதலில் ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். நன்றாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சட்டென முடிவுக்கு வந்தது. இதனையடுத்து கொஞ்ச காலம் சிங்கிளாக இருந்த விஷ்ணு; பிறகு ஸ்குவாஷ் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கும் அண்மையில் குழந்தை பிறந்தது.
விஷ்ணுவின் பேட்டி: இந்நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது முதல் மனைவி ரஜினி குறித்து பேசினார். அவர் பேசுகையில், "எனக்கு முதல் திருமணம் ஆகும் ஒரு மாதத்துக்கு முன்புதான் எனது முன்னாள் மனைவி ரஜினிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. என்ன நடந்தாலும் உன்னை இறுதிவரை பார்த்துக்கொள்வேன் என்று சொல்லித்தான் ரஜினியை திருமணம் செய்துகொண்டேன். மேலும் திருமணம் செய்து ஆறு ஆண்டுகள்வரை குழந்தை பெற்றுகொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்தோம்.
கேன்சருக்கு சிகிச்சை: அந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனால் முழுக்க முழுக்க சினிமா என்று இருந்ததால் தன் மீது அக்கறை இல்லை என்று ரஜினி நினைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் விவாகரத்துவரை சென்றது. வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. ராட்சசன் வெளியாகி ஐந்தாவது நாள் நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம். எல்லோரும் அந்த வெற்றியை கொண்டாடியபோது விவாகரத்தால் நான் கண் கலங்கிக்கொண்டிருந்தேன். எப்போதும் பார்த்துக்கொள்வேன் என்று செய்துகொடுத்த சத்தியத்தின்படி இன்றுவரை ரஜினியுடன் பழகிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











