ஒரு நாளைக்கு 20 மணிநேர ஷூட்டிங்.. டாய்லெட்டில் ட்ரெஸ் மாற்றிய முன்னணி ஸ்டார்
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விவேக் ஓபராய். கிட்டத்தட்ட 50 படங்கள்வரை நடித்திருக்கும் அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு குதிரம் போஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதில் தனது முதல் பட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
ராம்கோபால் வர்மா எழுதி இயக்கிய படம் கம்பெனி. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் விவேக் ஓபராய் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்டோரின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது விவேக் ஓபராய் நுழைந்து தனக்கென தனி பெயரை முதல் படத்திலேயே பெற்றார். அதனைத் தொடர்ந்து ரோட், சாத்தியா, தம், தர்ணா மனா ஹை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிஸி நடிகர்: விவேக் ஓபராய் பிஸியான நடிகராகவே வலம் வந்துகொண்டிருந்தார். பல ஹிட் படங்களை கொடுத்த அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 4 படங்களாவது நடித்துக்கொண்டிருந்தார். ஹிந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார் விவேக் ஓபராய். அஜித் நடித்த விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மலையாளத்தில் லூசிஃபர் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தெலுங்கில் குதிரம் போஸ் படத்தில் நடித்தார்.
விவேக் ஓபராய் பேட்டி: தற்போது இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துவரும் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தன முதல் படமான கம்பெனி, மூன்றாவது படமான சாதியா ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "முதல் படமாக ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கம்பெனி படத்தில் கமிட்டானேன். அந்தப் படம் ஆக்ஷன் படம். அதனால் எனக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜ் வரும் என்று நினைத்தேன்.
சாத்தியா வாய்ப்பு: அந்தச் சமயத்தில்தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. அது ரொமாண்ட்டிக் படம் என்பதால்எனக்கு செட் ஆகாது. அதில் நடிக்க வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். மேலும் ராம்கோபால் வர்மாவும் அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார். அதையும் மீறித்தான் நான் நடித்தேன். அதனால் அவர் என் மீது கோபமாகவும் இருந்தார். அவரிடம் அனுமதி கேட்பதைவிடவும் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
படம் எனக்கு பிடித்திருந்தது: சாத்தியா படம் எனக்கு பிடித்திருந்தது. சாத்தியா படத்தின் இயக்குநர் ஷாத் அலி எனது பள்ளி நண்பர். அவர் இந்தப் படத்துக்கு முன்னதாகவே அபிஷேக் பச்சனை வைத்து படம் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சாத்தியா படத்தில் நடிக்கும்போது எனது முதல் படமான கம்பெனி படம் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உணவக கழிவறையில் உடை மாற்றிய விவேக்: கம்பெனி படம் எடுக்கும்போது தேவையான பட்ஜெட் எங்களிடம் இல்லை. ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்தியபோது அங்கிருக்கும் பெஞ்ச்சுகளில் படுத்து தூங்கியிருக்கிறேன். அப்போது எனக்கென்று தனியாக கேரவனோ, மேக் அப் வேனோ இல்லை. எனவே ஷூட்டிங் ஸ்பாட் அருகே இருக்கும் உணவக கழிவறைகளில் உடைகளை மாற்றிக்கொள்வேன். ஒரு நாளைக்கு 18லிருந்து 20 மணி நேரம்வரை படப்பிடிப்பை நாங்கள் நடத்தினோம். படப்பிடிப்புக்கு தேவையான உபகரணங்களை நானே எடுத்து செல்லும் நிலைதான் அப்போது இருந்தது.
சந்து பாய்: ஒருவழியாக கம்பெனி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டது. அதில் சந்து பாய் என்ற கேரக்டரில் நான் நடித்திருந்தேன். படமும் ஹிட்டடித்தது. கம்பெனி படம் ரிலீஸானபோது நான் சாத்தியா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பேன். அப்போது ஒருமுறை ஏராளமான ரசிகர்கள் 'சந்து பாய்' என்று கத்தி ஆராவாரம் செய்தபடி சாத்தியா ஷூட்டிங்கிற்கு வருவார்கள்" என்றார்.
அலைபாயுதே ரீமேக்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான படம் அலைபாயுதே. மாதவன், ஷாலினி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. இன்றுவரை தமிழில் வெளியான காதல் படங்களில் தி பெஸ்ட்டாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்தான் சாத்தியா. அதில் ராணி முகர்ஜி ஹீரோயினாக நடித்திருந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த ஷாத் அலி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











