விவசாயிகளின் இன்னல் புரிந்ததால்தான் கத்தியில் நடித்தேன் - விஜய் பேச்சு
கோவை: விவசாயிகள் படும் இன்னல்கள் புரிந்ததால்தான் இந்த கத்தி படத்தில் நடித்தேன் என நடிகர் விஜய் கூறினார்.
விஜய் நடித்த கத்தி படத்தின் வெற்றி விழா, நல உதவி வழங்கும் விழா, கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், நேற்று நடந்தது. கோவை மாவட்ட ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், லேப்டாப், வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை விஜய் தன் கையால் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையி, "கோவை மண் மரியாதைக்கும் உபசரிப்புக்கும் பெயர் பெற்றது. வேறெந்த மண்ணிலும் இதைப் பார்க்க முடியாது.

விவசாயிகளின் முக்கியப் பிரச்னை, எதற்காக அவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்பது உட்பட பல்வேறு இன்னல்களை நான் அறிந்து கொண்டதன் வெளிப்பாடுதான், கத்தி படம். அதைச் சொல்லவே இந்தப் படத்தில் நடித்தேன். அப்படி நடிதத்தில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
விவசாயிகளின் கஷ்டங்களை எல்லோரும் புரிந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஏழைகளுக்கு உதவுவதால், எவ்விதத்திலும் நாம் குறைந்து போவதில்லை. நல உதவி வழங்க பலர் முன்வந்தாலும், அதை வாங்க, மக்கள் வராமல் இருக்கும் நிலை ஏற்படும்போதுதான், நம் நாடு வல்லரசாகும்," என்றார்.
இயக்குனர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











