அவர்கள் கேட்பதும் நியாயம்தானே...! - ரசிகர்கள் கோரிக்கையை ஏற்ற ரஜினி
சென்னை: ரசிகர்களுடனான சந்திப்பை ரஜினி ரத்து செய்தது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினியின் ரசிகர்கள் சிலரே கூட இது தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறி வரும் நிலையில், ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணி தெரியவந்துள்ளது.

உண்மையில் இந்த சந்திப்பு நடந்திருந்தால் (நிர்வாகிகள் திட்டமிட்டபடி) ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாவார்களே என்ற ரஜினியின் எண்ணம்தான், நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துள்ளது.
ரஜினிக்கு தன் ரசிகன் மனசு நன்றாகத் தெரியும். அவர்களின் ஒரே ஆசை 'தலைவரை நேரில் பார்த்து, ஒரு கை குலுக்கல் மற்றும் போட்டோ' என்பதுதான். அது கூட நிறைவேறாத ஒரு சந்திப்பு தேவையா என்பதுதான் ரஜினியின் கேள்வி.
நாளொன்றுக்கு குறைந்தது 1800 அதிகபட்சம் 2000 ரசிகர்களைச் சந்திக்க ரஜினி மன்ற நிர்வாகிகள் திட்டம் போட்டுக் கொடுத்தனர். இந்த 2000 பேரையும் தனித்தனியாக சந்தித்து 2000 முறை போட்டோ எடுப்பதில் உள்ள சிக்கல்களை ரஜினி சுட்டிக் காட்டியதும், குரூப் போட்டோவாக எடுக்கலாம் என யோசனை சொன்னார்கள். இது ரசிகர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.
இதை பலரும் விரும்பவில்லை. தனித்தனியாகத்தான் போட்டோ என்பதில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே என்பதுதான் ரஜினியின் உணர்வாகவும் இருந்துள்ளது.
இந்த சந்திப்பு எந்த வகையிலும் தங்களைத் திருப்திப்படுத்தாது என்ற ரசிகனின் குரல் ரஜினிக்கு தெளிவாகக் கேட்டதன் விளைவு, அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டு, அந்த ஒத்தி வைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல... ஒரு பத்தாயிரம் ரசிகர்களை மட்டும் பார்த்தால் போதுமா... மற்ற ரசிகர்கள் வருத்தப்படுவார்களே.. அவர்களையும் மகிழ வைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதே ரஜினியின் எண்ணமாக உள்ளது.
எனவே விரைவில் இன்னொரு வரவிருக்கிறது. அது மாவட்டந்தோறும் ரஜினியே நேரில் சென்று ரசிகர்களைச் சந்திப்பதாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அல்லது இன்னும் அதிக ரசிகர்களைச் சந்திக்கும் வகையிலான ஒரு மாற்றுத் திட்டமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











