ரஜினி ஆகவில்லை என்றால் என்ன?.. நான் சி.எம் ஆவேன்.. அடம் பிடித்த விஜய்.. இது என்னங்க புதுசா இருக்கு?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; சின்னம் எல்லாம் வாங்கி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க தயாராகிவருகிறார். இதற்கிடையே அவரது கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது தெரியவில்லை. ஆனால் எப்போது ரிலீஸானாலும் அன்றைக்குத்தான் எங்களுக்கு பொங்கல் என்று உறுதி எடுத்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
கோலிவுட்டில் பெரிய வியாபாரம் நடக்கக்கூடிய ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் சக்கைப்போடு போடும் என தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வது வழக்கம். மேலும் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்துக்கும் வந்திருக்கிறார்.

விசில் சின்னம்: அரசியலுக்கு வந்ததிலிருந்து அவருக்கு நெருக்கடிகள் வந்துகொண்டே இருக்கின்றன. கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் ஆஜராகிவிட்டார். இன்னும் சில விஷயங்களில் அவரை கடுமையாக எதிர்த்துவருகிறார்கள் அவருக்கு எதிரானவர்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
ஜனநாயகனுக்கு சிக்கல்: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்தார். ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் படம் ரிலீஸாகவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. விரைவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் பகவதி இயக்குநர் வெங்கடேஷ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் பற்றி பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வெங்கடேஷ் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "பகவதி படத்தில் வரும் முதலமைச்சர் கேரக்டர்; விஜய்யை இடைத்தேர்தலில் நிற்குமாறு கூப்பிடுவார். அதற்கு விஜய்யோ இல்லை, வேண்டாம் என்று மறுத்துவிட்டு செல்வார். ஆனால் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்கும்படிதான் முதலில் படத்தின் க்ளைமேக்ஸை எழுதியிருந்தேன். ஆனால் பகவதி ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ரஜினி நடித்த பாபா படம் ரிலீஸானது.
விஜய்க்கு தயக்கம்: அந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் ஏழாவது மந்திரத்தை முதலமைச்சர் ஆவதற்காக ரஜினி பயன்படுத்துவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அதை பயன்படுத்தமாட்டார். ரஜினியே இதை மறுக்கிறார். நாம் இப்போதுதான் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற முயற்சி செய்கிறோம். இதில் அவர் சி.எம் ஆவது போல் சீன் வைத்தால் ஓவராகிவிடும் என்ற பயம் வந்துவிட்டது. இதை சென்று விஜய்யிடமும் சொன்னேன். உடனே அவரோ, கதையில் சொன்னீங்க இப்போ வந்து மாற்றுகிறீர்கள் என ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது ஆக்ஷன் ஹீரோவாக ஆகிவிட்டு அடுத்தக்கட்டமாக அதை செய்யலாம் என சொல்லி சமாதானம் செய்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











