தமிழ்நாட்டுக்கு இன்னொரு விஜய் ரெடியா?.. தனுஷ் மீது நம்பிக்கை இருக்காம்.. களம் இறங்கிய ரசிகைகள்
சென்னை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்று முதலமைச்சராகிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல நடிகர்கள் அரசியல் ஆசையில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக தனுஷ் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பேசியதை பார்க்கும்போது அது உறுதியானதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களும் எழுந்திருக்கின்றன.
திருவள்ளூரில் தனுஷ் சில நாட்களுக்கு முன்பு ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தன் ரசிகர்கள் குறித்தும், அவர்களுக்கு நோக்கம் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் அவரது சகோதரிகளும் அந்த நிகழ்ச்சியில், தன் தம்பிக்கு பின்னால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதை பார்த்து பெருமையாக இருக்கிறது என்றும் பூரிப்படைந்தார். ஒட்டுமொத்த தனுஷ் குடும்பமும் நேற்று முன்தினம் பரவச நிலையில்தான் இருந்திருக்கும்.

அரசியல் பிரவேசம்: தனுஷின் ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோதே; அவருக்கும், பாஜகவுக்கும் ரகசிய டீலிங் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். இது ஒருபக்கம் இருக்க திமுகவின் கைப்பாவைதான் தனுஷ்; விஜய்யை வீழ்த்துவதற்கு தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களை அஸ்திரங்களாக பயன்படுத்த பெரிய பிளான் போடப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தனுஷின் இந்த நடவடிக்கை என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள்.
ரஜினியின் ஆசீர்வாதம்?: அதேசமயம் இதன் பின்னணியில் ரஜினிகாந்த்தான் இருக்கிறார். அண்ணாமலை தொடங்கியிருக்கும் வீ தி லீடர்ஸ் அமைப்பும், தனுஷின் மன்றமும் சேர்ந்து அரசியல் சக்தியாக உருவெடுத்தால்; தம்முடைய ஆன்மீக அரசியல் கனவு நிறைவேறும் என சூப்பர் ஸ்டார் தனி கணக்கு போடுவதாகவும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் விஜய்க்கு இப்போது இருக்கும் செல்வாக்கை பார்க்கையில் அவர்தான் அடுத்த 15 வருடங்களுக்கு முதலமைச்சர் என்றும் தவெகவினர் கூறுகிறார்கள்.
எப்போது நடக்கும்?: அநேகமாக நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனுஷ் மன்றம் முதலில் தனித்து களமிறங்கும். அதனையடுத்து 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக அண்ணாமலையோடு சேர்ந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில் தனுஷின் பேச்சையெல்லம் செமத்தியாக கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்ஸ். அதேசமயம் தனுஷுக்கு ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது.
ரசிகைகள் சொல்வது: ஒரு இளம் ரசிகை செய்தியாளரிடம் பேசுகையில், "தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஆதரவு கொடுப்போம். அவர் வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர் வருகிறேன் என்று சொன்னால் நாங்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்போம். படங்களை எல்லாம் முடித்துவிட்டு அரசியல் குறித்து சொல்கிறேன் என கூறியிருக்கிறார்" என்றார். இன்னொரு ரசிகை பேசுகையில், "அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு கிடைக்கும். மக்களுக்கு அவர் நல்லது செய்வார். இவரையும் ஏற்றுக்கொள்வார்கள்தான்" என தெரிவித்தார்.
இன்னொரு விஜய் ரெடி?: இதைப் பார்த்த ஒருதரப்பினர், இளம் ரசிகைகளின் ஆதரவு தனுஷுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற தொடங்கியிருக்கிறது. கர்ணன் உள்ளிட்ட படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக நடித்து; அந்த ஏரியாவையும் கவர் செய்திருக்கிறார்; இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இன்னொரு விஜய் ரெடியாவாரோ என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும் விஜய் மாதிரி தனுஷ் ஒரு பிரளயத்தை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே?.. ஆனால் யாருக்கு தெரியும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. உதாரணம்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கிறதே.


Click it and Unblock the Notifications
