பெண்கள், குழந்தைகள்தான் டார்கெட்.. சினிமாவில் விதைத்து அரசியலில் அறுவடை செய்த விஜய்!
சென்னை: தமிழ்நாட்டு அரசியலையே விஜய் ஒற்றை ஆளாக புரட்டி போட்டிருக்கிறார். தேர்தல் என்றாலே திமுக, அதிமுகதான் என்று இருந்த நிலைமையை மாற்றி தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பிரளயத்தை விஜய் நிகழ்த்தியதற்கு முக்கியமான காரணம் பெண்களும், குழந்தைகளும். அவர்களிடம் அந்த நம்பிக்கையை விஜய் விதைத்தது தன்னுடைய சினிமாக்கள் மூலமாக.
தமிழ்நாடு அரசியல் பல வருடங்கள் கழித்து இந்த வருட தேர்தலில்தான் மாறியிருக்கிறது. திமுக, அதிமுக என இரண்டு கழகங்கள் மட்டுமே மாநிலத்தின் அரசியல் அதிகார மையமாக விளங்கின. அவற்றை மீறி தேசிய கட்சிகள்கூட இங்கே காலூன்ற முடியவில்லை. கமல் ஆரம்பித்த மய்யமும் இப்போது திமுகவின் பக்கம்தான். விஜய் கட்சி ஆரம்பித்தபோதுகூட மநீம, தேமுதிக பெற்ற இடங்களைத்தான் பெறும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள்.
விஜய்யின் நீண்ட கால உழைப்பு: ஆனால் விஜய்யோ ரொம்பவே உறுதியாக இருந்தார். அவரது உறுதியை பார்த்து சிலர் சிரிக்கக்கூட செய்தார்கள். ஆனால் இப்போது அரசியலில் விருட்சமாகியிருக்கும் விஜய்; இந்த விதைக்கு நீண்ட வருடங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்தே தண்ணீர் ஊற்ற வைத்து; இப்போது அவர்களை வைத்தே அறுவடையையும் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி இது சாத்தியம்?: ரொம்பவே சிம்ப்பிள்தான். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்திய சில வருடங்களிலேயே அவரை இதற்கான தயாரிப்பாகத்தான் பார்த்தார் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். தனது மகனுக்கு நிலைத்த வெற்றி வேண்டும் என்றால் கண்டிப்பாக பெண்கள் மற்றும் குடும்பத்திடம் கனெக்ட் ஆக வேண்டும் என்று முடிவெடுத்த எஸ்.ஏ.சி; தன்னிடமிருந்து மகனை விடுவித்து வெளி படங்களை செய்ய வைத்தார். அப்படி அவர் செய்தாலும்; மகனை தனித்து விடவில்லை.
சிறுவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும்போது அந்த சிறுவனின் கன்ட்ரோலை கயிறு மூலம் தன் கைகளில் தந்தை வைத்திருப்பது மாதிரியே; விஜய் நடிக்கும் வெளிப்படங்களின் கதையை கேட்டு; அவர் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற கன்ட்ரோலை தனது கைகளில் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. அதன் பலனாகத்தான் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் விஜய்யிடம் வந்தது. முதலில் அதில் பிரசாந்த்தான் நடிக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸில், 'மனதில் நின்ற காதலியே' என விஜய் பாடுகையில் இளைஞர்கள் மட்டுமின்றி இளம்பெண்களும் விஜய்யை நினைத்து ஃபீல் செய்ய தொடங்கினார்கள். எஸ்.ஏ.சி எதிர்பார்த்தபடியே குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறினார் விஜய்.
கண்டுகொண்ட விஜய்: இதுதான் ஃபார்முலா என்பதை புரிந்துகொண்ட விஜய்யும் தந்தைக்கு ஒத்துழைப்பு கொடுக்க; அடுத்தடுத்து பலன்களை கண்டார்கள் மகனும், தந்தையும். முக்கியமாக தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த குடும்ப பாங்கான படங்களின் உரிமத்தை வாங்கி இங்கே மகனை வைத்து ரீமேக் செய்து பெண்கள் மத்தியில் வலுவாக இடம்பெற வைத்தார் சந்திரசேகர். அப்படி வந்தவைதான் நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே திரைப்படம் எல்லாம். ப்ரியமானவளே வந்த சமயத்தில் விஜய் ஏற்றிருந்த ரோல் காரணமாக அவரை திட்டாத பெண்கள் இல்லை. அப்படி திட்டினாலும் விஜய்யை தங்கள் வீட்டில் ஒருவராக பார்க்க தொடங்கிவிட்டார்கள் பெண்கள். அதைத்தான் எஸ்.ஏ.சியும், விஜய்யும் எதிர்பார்த்தார்கள்.

கமர்ஷியல் ரூட்டில் விஜய்: விஜய் மற்றும் எஸ்.ஏ.சியின் இலக்கு பெரிது. பெரிய இலக்கை அடைய வேண்டுமென்றால் ரூட்டை மாற்ற வேண்டும் என முடிவெடுத்து கமர்ஷியல் ரூட்டில் பயணப்பட்டார் விஜய். கமர்ஷியல் ரூட்டில் சென்றாலும் அதிலும் எம்ஜிஆர், ரஜினி ஃபார்முலாவை பின்பற்றி குழந்தைகளையும், இளைஞர்களையும் மேற்கொண்டு கவர வேண்டும் என டார்கெட் வைத்துக்கொண்டார்கள். இளைஞர்கள், குழந்தைகளை கவர்ந்து தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிக்கொள்வதற்கான அத்தனை வேலைகளும் இந்த ரூட்டில்தான் நடந்தன.
வரிசையாக ஹிட்: அப்படித்தான் திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, வேட்டைக்காரன், வேலாயுதம், துப்பாக்கி, மெர்சல் என ஃபுல் ஃபார்மில் இறங்கி அடித்தார் விஜய். அந்தப் படங்களில் எல்லாம் தன்னை ஒரு சாமானியனாகவே வைத்துக்கொண்டார். பக்கத்து வீட்டு பையன் தோற்றமும் விஜய்க்கு இருந்தது அவருக்கு பெரிய பலம். அதனால் ரசிகர்கள் பலரும், விஜய்யை தங்கள் வீட்டிலிருந்து நடிக்க சென்ற பையனாகவே பார்த்து கொண்டாட தொடங்கினார்கள். அவரும் அதற்கு தகுந்தபடி சண்டை காட்சிகள், எமோஷனல் காட்சிகள், தங்கையை காப்பாற்றும் அண்ணன், சமூகத்தில் நடக்கும் அவலங்களை பார்த்து கொந்தளிக்கும் இளைஞன், அக்கிரமம் செய்யும் அரசியல்வாதிகளை காலி செய்யும் நபர் என மக்களிடமிருந்து தன்னுடைய ரோல்கள் விலகாதபடி பார்த்துக்கொண்டார். அந்தப் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கவும் செய்தன.

குழந்தைகளிடம் தவிர்க்க முடியாத இடம்: குழந்தைகளை காந்தம் போல் அவர் ஈர்த்ததற்கு முக்கிய காரணம் வேறு யாரும் இல்லை எதுவும் இல்லை. ஒரே காரணம் அவர் மட்டும்தான். குழந்தைகளை கவரும் வகையிலான பாடி லாங்குவேஜ், வசனங்கள், குழந்தைகளின் மனதில் இடம்பெறக்கூடிய வகையில் பாடல்கள், பாடல்களில் பல குழந்தைகளுக்கு நடுவே இவரும் மீசை, தாடி வைத்த குழந்தையாக குழைவது, அவர்களை ஈர்க்கும் வகையிலான நடன அசைவுகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கினார். குழந்தைகளுக்காகத்தான் அவர் புலி என்ற படத்திலேயே நடித்தார். புலி படம் நடிக்கும்போதெல்லாம் விஜய்யின் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனாலும் குழந்தைகளுக்காக ஒரு ஃபேண்டஸி படம் செய்ததை வைத்தே தெரிந்துகொள்ளலாம் அவர் இந்த விஷயத்தில் எவ்வளவு தீர்க்கமாக இருந்திருக்கிறார் என்பதை.
ஒருகட்டத்தில் விஜய் அண்ணாவை பார்க்காமல் சாப்பிட மாட்டேன் என குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அந்த உலகத்துக்குள் ஆழமாக சென்றுவிட்டார். அவர்களிடம், தான் என்ன சொன்னாலும் எடுபடும் என்பதை விஜய் உணர்ந்தே இருந்தார். அதன் காரணமாகத்தான் தேர்தல் பரப்புரையின்போது எதை பற்றியும் கவலைப்படாமல், 'விஜய் மாமாவுக்கு வாக்களிக்க வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லுங்கள்' என கூறினார். அவர் அப்படி சொல்லியபோது என்ன இவர் சிறு குழந்தைகளிடம் வாக்கு கேட்கிறார் என்று கிண்டல் அடித்தார்கள்.
ஆனால் அவரது அந்த சூத்திரம்தான் நடந்து முடிந்த தேர்தலில் அனைத்தையும் அசைத்து பார்த்துவிட்டது. அது இப்போது சர்ச்சையாகி நீதிமன்றத்தில் இருந்தாலும்; விஜய்க்கு குழந்தைகளிடம் இருக்கும் ஆதரவை பார்த்து பலரும் மிரண்டு போயிருக்கிறார்கள்.இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து வாக்களிக்க வரும் முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் இப்போதே விஜய் 'அண்ணா, தேவதூதன்' என்ற ஸ்தானத்தில்தான் இருக்கிறார். எனவே அவர்கள் அடுத்த தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் வரும்போது, விஜய்யை மனதில் வைத்துதான் வருவார்கள் என ஒருதரப்பினர் பயப்படுவதையும் பார்க்க முடிகிறது. அது ஒருவகையில் உண்மையும்கூட.
எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கைவிடவும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவீதத்திலேயே தெரிந்தது. அனைத்தும் விஜய் அண்ணாவால் முடியும் என்ற பிம்பத்தை அவர் தன் திரைப்படங்கள் மூலம், தன்னுடைய நடிப்பு உள்ளிட்ட மற்ற திறமைகள் மூலம் பெரும்பாலானவர்கள் மனதுக்குள் விதைத்துவிட்டார். அந்த விதைத்தலின் விளைச்சலைத்தான் இன்று வெற்றியாக அறுவடை செய்திருக்கிறார். ஆனால் இந்த அறுவடையை வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்ல விதமாக பயன்படுத்த வேண்டுமென்றால் அவர் இத்தனை வருடங்கள் உழைத்ததைவிடவும் அதிகம் நேர்மையுடன் உழைக்க வேண்டும்; பெரிய நிதானமும், தெளிவும் வேண்டும். அது அனைத்தும் விஜய்க்கு வரும் காலங்களில் கிடைக்க வேண்டும். பார்ப்போம் குழந்தைகள், பெண்களின் ஏமாற்றத்தை சந்திக்காமல் மாற்றத்தை கொண்டு வருகிறாரா என்று?..


Click it and Unblock the Notifications
