இலங்கையில் ஷூட்டிங்-ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல்

இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கைக்கு நடிகர், நடிகைள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைபப்ட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது.
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிகர், நடிகைகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் நடிகை ஆசின் இந்த தடையை மீறி இலங்கையில் படப்பிடிப்புக்காகப் போயுள்ளார். ராஜபக்சே அரசு வேண்டி விரும்பி அழைப்பு விடுத்ததால் இந்தி நடிகர் சல்மான் கான் தனது ரெடி படத்தின் படப்பிடிப்பை இலங்கைக்கு மாற்றியுள்ளார். இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆசின். இந்த படப்பிடிப்புக்காகத்தான் தற்போது கொழும்பில் அவர் டேரா போட்டுள்ளார்.
தமிழ் திரையுலகம் மூலம் சினிமாவுக்கு வந்த ஆசின், தெலுங்கிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் மார்க்கெட்டை ஸ்திரமாக்கிக் கொள்ள ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார். அவர் முதலில் நடித்த கஜினி நன்றாக ஓடியது. ஆனால் அடுத்து சல்மான்கானுடன் இணைந்து நடித்த லண்டன் ட்ரீம்ஸ் போண்டியாகி விட்டது. இதையடுத்து ஆசினை சீந்த அங்கு யாரும் இல்லாத நிலை.
இந்த நிலையில்தான் மீண்டும் சல்மான் கானுடன் ரெடி படத்தில் இணைந்திருக்கிறார் ஆசின். இப்படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். இதனால்தான் திரையுலக கூட்டமைப்பினர் விடுத்த தடையையும் மீறி அவர் இலங்கை போயுள்ளார்.
இந்தியில் மார்க்கெட் டல்லடித்துள்ளதால் இடையில் விஜய்யுடன் இணைந்து காவல்காரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆசின். அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் ரெடி படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்ததால், விஜய் படத்தை விட்டு விட்டு இப்போது இலங்கை போய் விட்டார்.
தமிழ்ப் படத்தில் ஆசின் நடித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதை ராதாரவியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தடையை மீறி ஆசின் போயிருக்கிறார். அது கடுமையாக கண்டித்தக்கது. எனவே அதுகுறித்து உரிய முறையில் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications











