சாயாவின் டான்ஸ் ஷோ!

திருடா திருடி மூலம் ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட கள்ளி சாயா சிங். பெங்களூர் சுந்தரியான சாயா சிங், மன்மத ராசா பாட்டின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றார்.
ஆனால் என்ன காரணத்தாலோ, திருடா திருடிக்குப் பிறகு சாயா சிங்குக்கு பிரேக்கே இல்லாமல் போய் விட்டது. முதல் படத்தைத்தான் இன்னும் தனது முகவரியாகக் கொண்டிருக்கிறார் துரதிர்ஷ்ட சாயா.
இடையில் வாய்ப்புகள் மங்கியபோது குத்தாட்டத்திற்கும் தாவிப் பார்த்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமீபத்தில், யாரடி நீ மோகினி படத்தில், நயனதாராவின் தங்கச்சி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சாயாவைத் தேடி வந்தது.
ஆனால் சாயா சிங் மறுத்து விடவே அந்த வாய்ப்பு மலையாளத்து சரண்யாவைத் தேடிப் போனது. இப்போது சரண்யா பேசப்படும் நடிகையாக பிக்கப் ஆகி விட்டார்.
பட வாய்ப்புகள் சரிவர இல்லாத நிலையில் இருந்த சாயாவைத் தேடி புதிய வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் சினிமாவில் அல்ல, டிவியில்.
கன்னடத்தில் ஒளிபரப்பாகும் குனியோன பாரா என்ற டான்ஸ் ஷோவை ஹோஸ்ட் ஆக ஏற்று நடத்தவுள்ளார் சாயா சிங். இளைஞர்கள், இளைஞிகள் பங்கேற்கும் திறமைப் போட்டி இது.
இந்தப் புதிய அவதாரம் குறித்து சாயா சிங் கூறுகையில், போட்டி என்பது எப்போதுமே நம்மைச் சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கும். நான் நடிகையாக எனது பணியை ஆரம்பித்தேன். அதை விரும்பித்தான் நான் செய்தேன். அந்தப் பணியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டேன்.
குனியோன பாரா இளம் நடனக் கலைஞர்களுக்கான ஒரு ஷோ. எனது நடனத் திறமை மற்றும் நடன அறிவைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நடன நிகழ்ச்சி மூலம் எதிர்காலத்தில் பட வாய்ப்புகளும் வரும் என்று நம்புகிறேன் என்கிறார் சாயா.
சாயா சிங் படவுலகில் ஓய்ந்தாலும், அவரது நம்பிக்கை மட்டும் சாயாமல் இருப்பது சந்தோஷமான விஷயம்தான்.


Click it and Unblock the Notifications











