நான் ராஜீவ் ரசிகை- குஷ்பு

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் நடிகை குஷ்பு. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். லண்டனுக்கு குடும்பத்தோடு ஓய்வுக்கு சென்ற அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது:
கற்பு விஷயத்தில் நான் தவறாக ஏதும் பேசவில்லை. உண்மையைத்தான் பேசினேன். அதற்காக நான் சந்தித்த போராட்டங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இனி என் மனதில் பட்டதை தொடர்ந்து தைரியமாகப் பேசுவேன்.
எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே என்னிடம் இருந்து பொறுப்பற்ற அறிக்கைகள் வராது. சிந்தனைகளும் எழாது. எனது நோக்கங்கள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.
பரந்த மனப்பான்மை கொண்ட தமிழ் ஆண்கள்
தமிழ் ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் ரொம்ப பரந்த மனப்பான்மை உள்ள வர்கள். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். மரியாதை கொடுப்பவர்கள்.
தமிழ் பெண்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது இல்லை. எதற்கும் பயப்படக்கூடாது. மனதில் இருப்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. ஆனால் எந்த கட்சியில் சேருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
மும்பையில் நான் வசித்த போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் இருந்தது. எனது குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனர். என் படுக்கை அறையில் ராஜீவ்காந்தி படங்களைத்தான் வைத்திருந்தேன்.
காங்கிரஸ் தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, சுனில்தத் போன்றோரை அப்போது சந்தித்து இருக்கிறேன்.
நான் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை. எனது கணவர் சுந்தரோ பிரியங்கா காந்தியின் ரசிகர். சமூக சேவை பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்..." என்றார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











