சென்னையில் கேத்ரீனாவின் பெண்களுக்கான கருணை இல்லம்

தனது தாயார் சூசனுடன் இணைந்து சென்னையி்ல் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை தொடங்கப் போகிறாராம் கேத்ரீனா கைப்.
இதுதொடர்பாக கேத்ரீனாவின் தாயார் சூசன், தமிழக அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இல்லம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறாராம்.
ஏற்கனவே மதுரையி்ல் உள்ள ஹோப் ரீச் என்ற சேவை இல்லத்துடன் சூசனுக்கு நல்ல தொடர்பு உள்ளது. இந்த இல்லத்தில், கைவிடப்பட்ட பெண் குழந்தைகள், பெண் சிசுக் கொலையிலிருந்து தப்பி வந்த குழந்தைகள் பேணிக் காக்கப்பட்டு வருகின்றனர்.
இதே பாணியில் சென்னையில் ஒரு இல்லத்தைத் தொடங்கப் போகிறார்கள் சூசனும், கேத்ரீனாவும்.
இதுகுறித்து கேத்ரீனா கூறுகையில், சென்னையில் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன். இதுதொடர்பாக எனது தாயார் செயல்பாடுகளில் இறங்கியுள்ளார். அவருக்குத் துணையாக நான் இருக்கிறேன்.
இந்தப் பணியை சிறப்பாக செய்து முடிப்பதற்காக எனது தாயார் ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எனது பல கனவுகளில் இந்த இல்லமும் ஒரு கனவு. விரைவில் இது நனவாகும் என நம்புகிறேன்.
இல்லம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமில்லை. அதில் நிறைய முயற்சிகள் தேவைப்படும். இந்த இல்லத்திற்கு வரும் குழந்தைகளை நல்ல மனம் கொண்டவர்கள் தத்தெடுத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் யாரும் தத்தெடுக்காவிட்டால் அவர்களை 18 வயதாகும் வரை நாம்தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அது மிகப் பெரிய பொறுப்பு என்றார் கேத்ரீனா.
சரி, திரையுலக வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டபோது, நான் நடிக்க வந்தபோது இங்கு யாரையுமே எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட பின்னணியில் நடிக்க வந்த நான் இன்று இந்த அளவுக்கு வந்திருப்பதை பெருமையாகவும், பெரிதாகவும் கருதுகிறேன்.
நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எனது வேலையை நான் சரியாக செய்கிறேன். யாருடைய வேலையையும் நான் பறிப்பதில்லை என்றார் கேத்ரீனா புன்னகையுடன்.


Click it and Unblock the Notifications











