twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுயம்வரம் இனிதே முடிந்தது - மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தார் ராக்கி சாவந்த்

    By Staff
    |

    Rakhi Sawant with Elesh Parujanwala
    மும்பை: பாலிவுட்டை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியிருந்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்தின் சுயம்வரம் இனிதே முடிந்துள்ளது. தான் விரும்பிய மணமகனை நீண்ட நெடிய தேடலுக்குப் பின்னர் தேர்வு செய்து விட்டார் ராக்கி.

    அந்தக் காலத்தில் நடந்ததைப் போல தனது கணவரை சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் ராக்கி. கவர்ச்சி நடிகையான ராக்கி இதற்காக தேர்வு செய்தது ஒரு ரியாலிட்டி ஷோ.

    ராக்கி கா சுயம்வர் என பெயரிடப்பட்ட இந்த பிரமாண்ட சுயம்வர நிகழ்ச்சி உதய்ப்பூரில் உள்ள பதேகர் அரண்மனையில் நடந்தது.

    என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சி இந்த சுயம்வர நிகழ்ச்சிகளை தொகுத்து ஒளிபரப்பியது.

    ஆரம்பத்தில் 16 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ராக்கியின் விருப்படி பல்வேறு போட்டிகள், சோதனைகள் வைக்கப்பட்டன. இவற்றில் தேறி இறுதிச் சுற்றுக்கு எலேஷ் பருஜன்வாலா, சித்திஷ் ஜெயின், மனஸ் கத்யால் ஆகியோர் தகுதி பெற்றனர்.

    இவர்களில் ஒருவரை கணவராக தேர்ந்தெடுக்கும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நேற்று நடந்த இந்த விறுவிறுப்பான தேர்வில் என்.ஆர்.ஐ. தொழிலதிபரான எலேஷ் பருஜன்வாலா கழுத்தில் மாலையைப் போட்டு மணமகனாக தேர்வு செய்தார் ராக்கி.

    பெரும் திரளான வி.ஐபிக்கள், டிவி நேயர்கள் என கூடியிருந்த கூட்டத்திற்கு மத்தியில் நிஜமான சுயம்வரம் போலவே இது நடந்தது.

    இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற மூன்று பேரும் மேடையில் மாலைகளுடன் நிற்க, மணப்பெண் கோலத்தில் கையில் மாலையுடன் அவர்களை நோக்கிச் சென்றார் ராக்கி. பின்னர் எலேஷ் கழுத்தில் அவர் மாலையைப் போட்டு தனது தேர்வை வெளிப்படுத்த, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய எலேஷ், தனது கையில் இருந்த மாலையை ராக்கி கழுத்தில் போட்டார்.

    இதையடுத்து கூடியிருந்தவர்கள், கைகளில் இருந்த பூக்களை ராக்கி - எலேஷ் மீது தூவி வாழ்த்தினர். போட்டியில் தோல்வியுற்ற மற்ற இருவரும் எலேஷுக்கும், ராக்கிக்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

    எலேஷ், என்ஆர்ஐ தொழிலதிபர் ஆவார். கனடாவைச் சேர்ந்தவர். 30 வயதாகிறது. நேயர் கருத்துக் கணிப்பில் எலேஷுக்கு 78 சதவீத ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தோல்வியுற்றவர்களில் ஒருவரான மனஸ் கத்யால் டெல்லியைச் சேர்ந்தவர். இன்னொருவர் சித்திஸ் ஜெயின் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

    எலேஷை ராக்கி தேர்ந்தெடுத்ததும், எலேஷின் குடும்பத்தினர் ராக்கியிடம் சென்று வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்தனர். எலேஷின் தந்தை கூறுகையில், இனி ராக்கியும் எங்கள் வீட்டில் ஒரு மகளாக இருப்பார் என்றார்.

    பின்னர் எலேஷும், ராக்கியும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ கூறிக் கொண்டனர்.

    இந்த வித்தியாசமான சுயம்வர நிகழ்ச்சியை என்டிடிவி இமேஜின் நேரடியாக ஒளிபரப்பியது.

    கணவராகப் போகிறவரை ராக்கி தேர்ந்தெடுத்து விட்டாலும் கூட இப்போதைக்கு கல்யாணம் இருக்காதாம். இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகே கல்யாணம் நடைபெறும் என இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X