சந்தோஷ் சிவனுக்கு ஜோடி ராதா மகள்

மகர மஞ்சு என்ற பெயரில் உருவாகும் இப்படம் பிரபல மலையாள ஓவியர் ராஜா ரவி வர்மா குறித்த கதையாகும்.
இந்தப் படத்தை மலையாளத்தில் உருவாக்கி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த வாரம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. லெனின் ராஜேந்திரன் படத்தை இயக்கவுள்ளார்.
ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றில் பிசியாக இருந்தபோதிலும், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் சந்தோஷ் சிவன். இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குநர் லெனின் ராஜேந்திரன்தான் என்னை வற்புறுத்தி நடிக்க சம்மதிக்க வைத்தார். ராஜா ரவிவர்மா கேரக்டரில் நடிக்கிறேன். இது மிகப் பெரிய விஷயம்.
சிறு வயது முதலே ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்து வளர்ந்தவன் நான். நான் சிறுவனாக இருந்தபோது, எனது பாட்டி எனக்கு கதைகளைச் சொல்லும்போது ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை வரைந்து அதைக் கதையாக சொல்வார்.
எனக்கும் கூட கொஞ்சம் வரையத் தெரியும். ராஜா ரவிவர்மாவை சிறு வயது முதலே எனது நினைவுகளில் ஏற்றிக் கொண்டு விட்டதால், இந்த கலை எனக்கும் வந்தது என நினைக்கிறேன் என்றார் சந்தோஷ் சிவன்.
இப்படத்தில் சிவனுக்கு ஜோடியாக நடிக்கப் போவது நடிகை ராதாவின் மகள் கார்த்திகா.
திருவனந்தபுரம், கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.
சரி நடிப்பு உங்களுக்கு வருமா என்று கேட்டபோது, நான் முதன் முதலில் நடித்த படம் ராக். 1989ம் ஆண்டு வெளியான படம் இது. அப்படத்தில் நான் நடித்த காட்சியைப் பார்த்து விட்டு என்னுடன் நடித்த பங்கஜ் கபூர் சிரித்த சிரிப்பு இன்னும் என் மனதிலேயே உள்ளது.
இப்போது மீண்டும் நடிக்கப் போகிறேன். பங்கஜ் கபூர் சிரித்த சிரிப்பை நினைத்துப் பார்க்கும்போதுதான் சற்று பயமாக இருக்கிறது என்று சிரிக்கிறார் சிவன்.


Click it and Unblock the Notifications











