பாலு படத்தில் மாளு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொல்ல வருகிறார் பாலு மகேந்திரா. தரமான படங்களை மட்டுமே தருவது என்ற குறிக்கோளுடன் படம் எடுத்து வரும் பாலு மகேந்திரா, இந்த முறை மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையுடன் வருகிறார்.
இளம் பையனுக்கும், கட்டழகி ஒருவருக்கும் இடையே ஏற்படும் காதலைச் சொல்லும் கதையுடன் அனல் காற்று என்ற படத்தை இயக்கப் போகிறார் பாலு மகேந்திரா.
முதலில் கோடை விடுமுறை என இப்படத்துக்குப் பெயரிட்டிருந்தார் பாலு. இப்போது அதை அனல் காற்று என அழகாக மாற்றியுள்ளார்.
இப்படத்தின் தொடக்க விழா தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தியேட்டரில் புதன்கிழமை நடந்தது. பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அனல் காற்று கதை உருவான விதம் குறித்து பாலு தனக்கே உரிய பாணியில் அழகாக விவரித்தார்.
படத்தில் நடிக்கப் போகும் கலைஞர்களை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாலு மகேந்திரா கூறியபோதிலும், மாளவிகாவை அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது நாயகிக்கு ஏற்ற உடல் வாகும், நடிப்புத் திறமையும், அழகும் ஒருங்கே அமைந்தவர் மாளவிகா என்பதால் அவரை பாலு மகேந்திரா புக் செய்துள்ளதாக தெரிகிறது.
ஏஏஎன்கே நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வழக்கம் போல பாலு மகேந்திராவின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
சீக்கிரம் வாங்க மகேந்திரா, நல்ல படம் பார்த்து நாளாச்சு!


Click it and Unblock the Notifications











