எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அசின்

திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழு விரைவில் கூடி முடிவு எடுக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறியுள்ளார். இவராவது உறுதியாக அசின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் விஜய்யுடன் அசின் நடித்து வரும் காவலன் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன் திடீர் ரகளை ஏற்பட்டது. இலங்கை சென்றதற்கு கண்டனம் தெரிவித்து அசினுக்கு சிலர் கறுப்புக்கொடி காட்டினார்கள்.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார்.
"நான் இலங்கை சென்றது பற்றி பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் என்ன அர்த்தம்? சரி, இந்த பிரச்சினையை மீண்டும் கிளப்ப நான் விரும்பவில்லை. கருத்து கூறுவதையும் தவிர்க்கிறேன். நானே பிரச்சினைகளை இழுத்துப்போட்டுக்கொள்ள விரும்பவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











