காவ்யாவைத் தாங்கும் மலையாளம்

என் மன வானில், காவ்யா நடித்த முதல் தமிழ்ப் படம். படம் நன்றாக ஓடியும் கூட காவ்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம், அவரைக் கவருகிற மாதிரியான படங்களை யாரும் தரவில்லையாம்.
பெரிய இடைவெளிக்குப் பின்னர் லேட்டஸ்டாக அவர் நடித்த படம் சாது மிரண்டா. இப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தொடர்ந்து தமிழில் நடிக்க அவரும் ஆர்வமாகவே உள்ளார். ஆனாலும் தாங்கள் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று காவ்யாவிடம் மிஸ் ஆவதாக தமிழ்த் திரையுலகினர் நினைப்பதால், வழக்கம் போல காவ்யாவைத் தேடி பட வாய்ப்புகள் பாயவில்லை.
இருப்பினும் மலையாலத்தில் காவ்யாதான் டாப் ஸ்டார். அங்குள்ள அத்தனை லீடிங் ஸ்டார்களுடனும் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுடன் ஜோடி போட்டு நடிக்கிறார்.
இதுவரை திலீப், ஜெயசூர்யா, பிருத்விராஜ் ஆகிய ஹீரோக்களுடன்தான் அதிகம் நடித்துள்ளார் காவ்யா. ஆனால் முதல் முறையாக இரு பெரும் ஹீரோக்களுடன் ஜோடி சேருகிறார்.
ஏப்ரல் 4ம் தேதி தொடங்கும் மோகன்லால் படத்தில் காவ்யா நடிக்கவுள்ளார். மாடம்பி என்று இப்படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். ஜெயலட்சுமி என்ற கேரக்டரில் இப்படத்தில் நடிக்கிறாராம் காவ்யா.
அதேபோல ஜானி ஆண்டனி இயக்கும் பட்டணத்தில் பூதம் படத்தில் மம்முட்டியுடன் ஜோடி போடுகிறார். மம்முட்டியின் அழகிய ராவணன் படத்தில்தான் காவ்யா குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











