ஷ்ரியாவின் 'ரிட்டர்ன்' சபதம்!

மழை மூலம் தமிழுக்கு வந்து ரசிகர்களை வசீகரித்த ஷ்ரியாவுக்கு, ஏற்றம் கொடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி. ரஜினிக்கு ஜோடி என்ற புதிய அந்தஸ்து அவருக்கு பெரும் கிராக்கியை ஏற்படுத்தியது.
அந்த சூட்டோடு விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்து அசத்தினார். அவருக்கு பின்னாலேயே துரத்தி வந்த துரதிர்ஷ்டத்தை உணராமல், இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடப் போய் அத்தனை ஹீரோக்களும் சேர்ந்து அவரை அம்போ என திராட்டில் விட்டு விட்டனர்.
வடிவேலுவுடன் நடித்த ஒரே காரணத்திற்காக ஷ்ரியாவை தனது படத்திலிருந்து நீக்கி விட்டார் அஜீத். அதைத் தொடர்ந்து வேறு சில பட வாய்ப்புகளும் கூட ஷ்ரியாவிடமிருந்து விலகி ஓடியதாக செய்திகள் வந்தன.
இதனால் பெரும் கவலையில் மூழ்கினார் ஷ்ரியா. இதனால் குத்துப் பாட்டுக்களில் ஆடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் தன்னை ஹீரோக்கள் நிராகரித்து விட்டதாகவும், இன்ன பிற செய்திகளையும் அவர் மறுக்கிறார்.
இதுகுறித்து ஷ்ரியா கூறுகையில், நான் சரியாக ஒத்துழைப்பதில்லை. அதிக சம்பளம் கேட்கிறேன், ஹீரோக்கள் புறக்கணிக்கிறார்கள் என்று வரும் அனைத்து செய்திகளுமே வதந்திகள். சற்றும் அவற்றில் உண்மை இல்லை.
நான் நடிக்க ரெடியாகத்தான் இருக்கிறேன். கிளாமருக்கும் நான் தயார்தான். ஆனால் கொள்வார்தான் யாரும் இல்லை.
படப்பிடிப்பின்போது என்னுடன் வரும் யாருடைய செலவுக்கும் பணம் கேட்டு தயாரிப்பாளர்களை கொடுமைப்படுத்தாத ஒரே நடிகை நான் மட்டுமே. பேசிய சம்பளத்தை விட கூடுதலாக ஒரு பைசா கூட நான் கேட்டு நெருக்கடி தந்ததில்லை.
நான் மும்பைக்கு இடம் பெயர்ந்ததை வைத்து சிலர் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று செய்தி கிளப்பி விடுகின்றனர். அது உண்மை இல்லை. நல்ல தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.
தமிழ்த் திரையுலகினருக்கு என்னை நன்றாக தெரியும். எனது குணம் புரியும். வடிவேலு விவகாரத்தை நான் மறந்து விட்டேன். இதுதொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. எனது ரோலுக்கும், சம்பளத்துக்கும் மட்டும்தான் நான் முக்கியத்துவம் தருகிறேன். மற்ற வதந்திகள் குறித்து எனக்கு கவலை இல்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய ஷ்ரியாவாக நான் மாறியிருப்பேன் என்கிறார் நம்பிக்கையுடன் ஷ்ரியா.
நல்லது நடக்கட்டும்.


Click it and Unblock the Notifications











