'தி டர்ட்டி பிக்சர்' வித்யா!
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. வித்யா பாலன், சில்க் வேடத்தில் நடிக்கவிருக்கிறார், ஏக்தா கபூர் தயாரிக்கவுள்ளார். இது பழைய செய்தி. தற்போது மேலும் சில தகவல்கள் இப்படம் தொடர்பாக வெளியாகியுள்ளன.
தென்னகத்தை சிலிர்க்க வைத்த கவர்ச்சி தேவதையாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. படத்தின் ஹீரோ, ஹீரோயினை விட சில்க்தான் மிக முக்கியமானவராக இருந்தார் அன்று. குறிப்பாக, ரஜினி, கமல் படங்களில் அவர்களை விட அதி முக்கியமானவராக ரசிகர்கள் பார்த்தது சில்க்கைத்தான். அந்த அளவுக்கு அவரது அழகும், கவர்ச்சியும் அந்தக் காலத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது.
அவர் கடித்து கீழே வைத்த ஆப்பிளை ஏலம் விட்ட கதையும் அன்று நடந்தது. மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் சில்க். கவர்ச்சி மட்டுமல்லாமல், வசீகரமான முக அழகையும் கொண்டிருந்தவர் சில்க்.
அப்படிப்பட்ட சில்க்கின் வாழ்க்கை மிகவும் சோகமயமானது. திடீரென அவர் ஒரு நாள் இறந்து போனபோது அத்தனை ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சில்க்கின் கதையை ஏக்தா கபூர் படமாக்கவுள்ளார். இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் வித்யா பாலன். இதுதொடர்பான பூர்வாங்கப் பேச்சுக்கள் முடிவாகி வித்யாவை ஒப்பந்தம் செய்து முடித்து விட்டார் ஏக்தா.
படத்திற்கு தற்போது தி டர்ட்டி பிக்சர் என பெயரிட்டுள்ளார் ஏக்தா. படத்தை இயக்கப் போவது மிலன் லூத்திரா. இவர்தான், வித்யாவை மட்டுமே இப்படத்தின் நாயகியாக்க முடியும் என்று ஏக்தாவிடம் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
ஏன் என்று லூத்திராவிடம் கேட்டபோது, வித்யா பாலன் ஒரு முழுமையான இந்தியப் பெண். கவர்ச்சிகரமான, அதேசமயம், வசீகரமான தோற்றம் கொண்டவர். சிறந்த நடிகை. மேலும் தென்னிந்திய அடையாளங்களும் அவரிடம் உள்ளன. எனவே அவரைத் தவிர வேறு யாரும் எனது மனதில் தோன்றவில்லை என்றார் லூத்திரா.
படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அதாவது திரைப்பட இயக்குநர் வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.
சில்க் குறித்து ஏக்தா கபூர் கூறுகையில், 70களில் திரையுலகில் ஆணாதிக்கம்தான் அதிகம் இருந்தது. ஆனால் அதை தாண்டி, அதை உடைத்து வெற்றி பெற்ற ஒரே நடிகை சில்க் மட்டுமே. அவரது வாழ்க்கை வரலாறு நிச்சயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, அப்பாவிச் சிறுமியாக இருந்து, பின்னர் கவர்ச்சி ராணியாக மாறி புகழின் உச்சியில் இருந்த சில்க்கின் வாழ்க்கை மிகப் பரிதாபமானது, சோகம் நிறைந்தது என்கிறார் ஏக்தா.
இப்படத்திற்காக வித்யா பாலன் நிறைய ஹோம் ஒர்க் செய்ய ஆரம்பித்துள்ளாராம். சில்க்கின் நடை, உடை, பாவனை, மேனரிசம் என பலவற்றையும் அவர் பார்த்து ஆய்வு செய்து வருகிறார். சில்க்கின் பாடி லாங்குவேஜையும் அவர் உன்னிப்பாக கவனித்து மனதில் பதிய வைத்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











