மறுபடியும் ராதா .. இன்னொரு புகார்!

சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் நாயகியானவர் ராதா. அப்படத்திற்குப் பிறகு ராதாவைக் காணவில்லை. அவரை புக் செய்தால் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று பயந்த படத் தயாரிப்பாளர்கள் ராதா பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்த நிலையில், சுந்தரா டிராவல்ஸ் இயக்குநர் மீது சில மாதங்களுக்கு முன்பு சரமாரியாக புகார்களைக் கூறினார்.
இந்த நிலையில் தற்போது காத்தவராயன் பட இயக்குநர் சலங்கை துரை மீது புகார்களை அடுக்கியுள்ளார் ராதா. தன்னிடம் ஒரு கதையை சொல்லி விட்டு, வேறு மாதிரியாக எடுத்து விட்டதாக துரை மீது குற்றம் சாட்டியுள்ளார் ராதா..
காத்தவராயன் படத்தில் ராதாவுக்கு ஹீரோயின் வேடமல்ல. அதில் விதிஷாதான் நாயகியாக நடித்திருந்தார். கள்ளச்சாராயம் காய்ச்சும் பெண்ணாக, கிளாமர் வேடத்தில் நடித்திருந்தார் ராதா. படத்தில் ஒரு கிளாமர் பாட்டிலும் தலை காட்டியிருந்தார் ராதா.
தன்னைபடத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்ைல என்று கூறியுள்ள ராதா அதுகுறித்து தெரிவிக்கையில், இயக்குநர் சலங்கை துரை, என்னிடம் சொன்ன கதை வேறு. இப்போது படமாக வந்திருக்கும் கதை வேறு.
படத்தின் கதாநாயகியே நீங்கள்தான். உங்களுக்கு மூன்று பாடல்கள் இருக்கிறது என்றார். ஆனால், படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் கொடுத்து இருக்கிறார். என் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் குறைத்து விட்டார்.
பாடல் காட்சிக்காக மலேசியா சென்று வந்தபின், உங்களுக்கு இன்னும் சில காட்சிகள் இருக்கிறது'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் கடைசி வரை கூப்பிடவே இல்லை. நம்பவைத்து, ஏமாற்றி விட்டார்.
படத்துக்காக நான் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆனால் ஒரு லட்சம்தான் கொடுத்தார்கள். அதிலும் ரூ.40 ஆயிரத்தை கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்தார்கள். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்டபின், எனக்கு வரவேண்டிய பணம் வந்து சேர்ந்தது என்று கூறியுள்ளார் ராதா.
ராதாவுக்கு மார்க்கெட் மந்தமாக இருப்பதற்கான காரணம் இப்போது தெரிந்திருக்குமே!


Click it and Unblock the Notifications











