குட்டி ராதிகா..சாக்குப் பை..பணம்!

கடந்த 2007ம் ஆண்டு திரைத் துறையினர் பெருமளவில் வரி ஏய்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தனது அனைத்து வட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
மேலும், மத்திய நேரடி வரி வாரியத்தின் உத்தரவுப்படியும் வருமான வரித்துறையினர் இதுபோன்ற அதிரடி ரெய்டு நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், பெங்களூர் டாலர்ஸ் காலனியில் நடிகை குட்டி ராதிகா ரூ. 12 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கவிருக்கும் தகவல் வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
மேலும், ரூ. 3 கோடி செலவில் ஒரு கன்னடப் படத்தை அவர் தயாரிக்கப் போவதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இவை அனைத்தும் வருமானத்திற்கு மீறிய தொகைகள் என்றும் வருமான வரித்துறையினருக்கு ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது. அப்போது குட்டி ராதிகா, ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் 5 லட்சம்தான் சம்பளமாக வாங்கி வந்தார்.
இந்த நிலையில், 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியன்று பிற்பகல் 12 மணியளவில் ராதிகாவின் வீட்டுக்கு பெருமளவில் பணம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராதிகாவின் வீட்டுக்கு அருகே மாறு வேடத்தில் வருமானவரித்துறையினர் நிறுத்தப்பட்டனர்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு டயோட்டா இன்னோவா கார் வந்தது.
ராதிகாவின் வீட்டுக்குள் கார் போய் நின்றது. பின்னர் அதிலிருந்து நான்கு சாக்கு மூட்டைகள் இறக்கப்பட்டன. அதில் பணம் இருந்தது.
அந்த மூட்டைகள் உள்ளே போன பின்னர் வருமான வரித்துறையினர் உள்ளே நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கட்டுக்கட்டாக இருந்த பணத்தையும் அவர்கள் மீட்டனர். மொத்தம் ரூ. 3.73 கோடி பணம் அதில் இருந்தது. மேலும், ஏராளமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
2007-08ம் ஆண்டில் குட்டி ராதிகாவின் வருமானம் ரூ. 9.96 கோடியாகும். அதற்கு முன்பு வரை குறைத்தே வருமான வரிக் கணக்கை சமர்ப்பித்து வந்தார் ராதிகா. ஆனால் அதிரடி ரெய்டு காரணமாக வருமான வரித்துறைக்கு அவர் ரூ. 3.24 கோடி வரியைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நேரடி வரி ஆணையம் இந்தத் தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
மிகக் குறைவான ஊதியம் பெற்று வந்த ஒரு நடிகையிடம் இவ்வளவு பணம் எப்படி வந்ததோ?


Click it and Unblock the Notifications











