தடைக்கு கடும் எதிர்ப்பு: நிகிதாவுக்கு குவிகிறது ஆதரவு!

நடிகர் தர்ஷனுடன் நிகிதா தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
இதனால் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நிகிதா மீத தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தஷ்ஷனுடன் தவறான தொடர்பு இல்லை என்று நிகிதா மறுத்துள்ளார்.
தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கைவசம் தற்போது 3 கன்னட படங்கள் உள்ளன.
பெருகும் ஆதரவு
தயாரிப்பாளர்களின் இந்தத் தடையை கன்னடப் பட உலக இயக்குநர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் எதிர்த்துள்ளனர்.
நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை அநீதியானது, தேவையற்றது, சட்டவிரோதமானது என கூறியுள்ளனர்.
கன்னட திரையுலகின் மற்ற பல சங்கங்களும் இந்த முடிவைக் கண்டித்துள்ளன.
நடிகை தாரா
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை தாரா கூறும் போது, "நிகிதா மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தாமல் தடை விதித்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றார்.
கன்னட இயக்குனர்கள் சங்கமும் நிகிதாவுக்கு தடை விதித்ததை எதிர்த்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "நிகிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அநீதியானது, தேவையற்றது. தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை. யாரோ சிலரின் தனிப்பட்ட விரோதம் இதில் தெரிகிறது," என்றார்.
நிகிதா நடிக்கும் 'காட்டான் பெட்' படத்தை இயக்கி வரும் ஓம்பிரகாஷ்ராவ் கூறும் போது, "தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவுக்கு நான் அடிபணிய மாட்டேன். நிகிதாவை வைத்து படத்தை இயக்குவேன்," என்றார்.
ஜெயமாலா எதிர்ப்பு
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர்கள் கிரிஷ்கேசர வல்லி, சுரேஷ், நடிகை ஜெயமாலா, கன்னட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோரும் நிகிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்காக ஒரு பிரபல நடிகையின் திரைவாழ்க்கையை முடக்குவதை அனுமதிக்க முடியாது என நடிகை ஜெயமாலா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











