ரஷ்ய மாணவிக்கு மிஸ் வேர்ல்ட் பட்டம் - தவற விட்டார் பார்வதி

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், மிஸ் ரஷ்யா, ஷேனியாவுக்கு மிஸ் வேர்ல்ட் பட்டம் கிடைத்தது.
இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மிஸ் இந்தியா பார்வதி, நிச்சயம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பார்வதியும், நான் நிச்சயம் வெல்வேன் என்று திடமாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் கடைசி நொடியில் பட்ட வாய்ப்பு பார்வதிக்கு நழுவிப் போனது.
பட்டத்த ரஷ்ய அழகியிடம் தவற விட்ட பார்வதி, முதல் ரன்னர் அப் (2வது இடம்) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3வது இடத்தை (2வது ரன்னர் அப்) டிரினிடாட்-டொபாகோ அழகி காப்ரியேல் வால்காட் பெற்றார்.
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ள சுகினோவோ, மாணவி ஆவார். மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தவிர டாப் மாடல் விருதையும் பெற்றார் சுகினோவோ. இதுதவிர நீச்சலுடைப் போட்டியில், 3வது இடம் இவருக்குக் கிடைத்தது.
ஜோஹன்னஸ்பர்க் நகரின் சான்டான் கன்வென்ஷன் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. உலகெங்கும் உள்ள பல்வேறு தொலைக்காட்சிகள் மூலம் கோடிக்கணக்கானோர் இதைக் கண்டு களித்தனர்.
மிஸ் இந்தியா பார்வதி ஓமனக்குட்டன் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அழகிகள் ஐவரில் ஒருவர். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சற்றும் சளைக்காமல் பதில் சொல்லி அசத்தினார். அழகிய வெள்ளை நிற உடையில், தேவதை போல காணப்பட்ட பார்வதியின் அழகு அனைவரையும் அசரடித்தது. அதேபோல கேள்விகளுக்கு அவர் பதில் கூறிய விதமும் அனைவரையும் கவர்ந்தது.
தென் ஆப்பிரிக்கா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எனது நாடும், தென்ஆப்பிரிக்காவும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டவை. இரு நாடுகளும் விருந்தோம்பலுக்கு பெயர் போனவை. இந்தியாவுக்கு மகாத்மா காந்தி என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு நெல்சன் மண்டேலா என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











