மோசடி புகார்.... நடிகை யுவராணியின் கணவரிடம் போலீஸ் விசாரணை!

யுவராணியின் கணவர் ரவி (38). மலேசியாவைச் சேர்ந்த அவர், அங்கு டிராவல் ஏஜென்சி மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.45 மணி அளவில், அவர் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
அதற்கு முன்பாக, சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாலா (46) என்பவர் ரவி பற்றி ஒரு புகார் கொடுத்தார். அதில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி தன்னிடம் ரவி பணம் மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
ரவி சென்னைக்கு விமானத்தில் வரும் தகவலையும் போலீசாரிடம் அவர் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், ரவியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது, புகார் கொடுத்த பாலா தன்னிடம் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், மலேசியாவில் உள்ள வேறு ஒரு ஏஜெண்டிடம்தான் பணம் கொடுத்தார் என்றும் ரவி கூறியதாக தெரிகிறது. எனவே ரவியை விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் போலீசார்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











