மரணப் படுக்கையில் ஜேட் கூடி

லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றபோது அவருடன் இணைந்து கலந்து கொண்டவர் இங்கிலாந்து டிவி நடிகையான ஜேட் கூடி. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காரசாரமான விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் கூடி. ஷில்பா வெற்றி பெற்றார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் கூடி, ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த பிக் பிரதர் டைப்பிலான நிகழ்ச்சியில், கூடியும் பங்கேற்றார்.
ஆனால் இங்கு வந்தபோதுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து விலகி நாடு திரும்பினார் கூடி.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் தொடங்கின. தற்போது புற்று நோய் முற்றிய நிலையில் அவர் சிறிது காலமே வாழ்வார் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூடியை கடைசி முறையாக பார்ப்பதற்காக ஷில்பா ஷெட்டி, லண்டன் செல்கிறார்.
இந்தியா வந்து திரும்பிச் சென்றது முதலே கூடிக்கு அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம் ஷில்பா.
சமீபத்தில் கூடியின் திருமணம் லண்டனில் நடந்தது. அதில் ஷில்பாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் கடைசி முறையாக ஒருமுறை கூடியை பார்த்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் ஷில்பா.
இப்போது மரணப் படுக்கையில் உள்ள ஜேட் கூடி எந்த நேரமும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











