நயன்தாராவுக்கும் கோயில்?!

ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்துக்கும், விளம்பர மோகத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
குறிப்பாக திருச்சிக்காரர்கள், இதில் டபுள் பிஎச்டி வாங்குமளவுக்கு தேறிவிட்டார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் அரிய திருப்பணியை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள்தான்.
இவர்களைப் பார்த்து, சும்மா இருக்க முடியாமல் நெல்லையைச் சேர்ந்த சிலர் எங்கோ ஒரு கிராமத்தில் நமீதாவுக்கு கோயில் கட்டியதாக அறிவிக்க, அதை போலீசார் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேட வேண்டி வந்தது.
இப்போது மீண்டும் திருச்சியைச் சேர்ந்த சிலர் கோயில் திருப்பணியைத் துவங்கிவிட்டனர்.
இந்த முறை அவர்களுக்கு நயன்தாரா மீது 'பக்தி' பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது.
அரவக்குறிச்சிக்குப் பக்கத்தில் கோயில் கட்டப் போவதாக அறிவித்துளனராம். இதை சில ஊடகங்களும் பரபரப்பாக கொளுத்திப் போட, திருச்சி மாவட்ட போலீசாருக்கு நெருக்கடியாகிவிட்டது. உண்மையிலேயே இப்படியெல்லாம் கட்டப் போகிறார்களா... இல்லை சும்மா கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா... எனத் தெரியாத போலீசார், அரவக்குறிச்சி முழுவதும் தேடத் துவங்கி இருக்கிறார்களாம்.
"சும்மாவே சிலர் தேவையில்லாம பரபரப்புக் கிளப்ப இப்படி செய்தி பரப்புறாங்க சார். குறிப்பா சில இணைய தளங்கள்ல ஆதாரமே இல்லாமே எதையெதையோ எழுதி வைக்க அதனால நமக்கு பெரும் தொல்லை. முதல்ல அவங்களைக் கட்டுப்படுத்தணும்... இந்தச் செய்தி கூட ஏதோ ஒரு பிளாக்லதான் வந்திருக்கு. அதோட நம்பகத் தன்மை தெரிஞ்ச பிறகுதான் சொல்ல முடியும்.
கோயில் கட்டுவதைப் பற்றி நாங்க கருத்து சொல்ல விரும்பல... ஆனா காதுல கேக்கறதையெல்லாம் செய்தியாக்கும், சுய செய்தியாளர்களை முதலில் அடக்கி வச்சாதான் சரிப்படும்," என்கிறார் சென்னை மாநகர சைபர் குற்றப் பிரிவு அதிகாரி சைலேஷ்குமார்.
திருச்சி அரவக்குறிச்சியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், நயன்தாராவுக்கு கோவில் கட்ட நிலம்கூட வாங்கிவிட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது போலீஸ்.
இதுகுறித்து நயனதாராவின் கருத்தறிய அவரது மேலாளரை அணுகினோம். அவரோ, "இதெல்லாம் சும்மா ரீல் சார். நயன்தாராவுக்கு ரசிகர் மன்றம் கூட கிடையாது. தேவை.யில்லாம போலீஸ் வேற எங்ககிட்ட விசாரிக்குது..." என்றார்.


Click it and Unblock the Notifications











