அச்சமின்றி படத்தில் திஷா பாண்டே!

ஷாஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஐ.பாதுஷா தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ராஜேஷ் கே.வாசு. இவர் பல தமிழ், மலையாள படங்களில் துணை, இணை இயக்குநராக பணியாற்றியவர்.
ஹீரோவாக புதுமுகம் விநாயகம் அறிமுகமாக, திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக பெங்களூர் அழகி ஒருவர் அறிமுகமாகிறார்.
புதியவர் சஜிராம் இசையமைக்கிறார். பி.கே.ராஜா வசனம் எழுத, மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - வினோத், தயாரிப்பு மேற்பார்வை - இராமகிருஷ்ணன், குட்டிகிருஷ்ணன், செந்தாமரை.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கே.வாசு கூறுகையில், "அதிகம் படித்து அதிகாரிகளாக வலம் வரும் சிலர், நாகரீகம் என்கிற பெயரில் நம் கலாச்சாரத்தை மறந்து கடமை தவறுவதால் அவர்களும் பாதிப்படைவதோடு, அவர்களின் நல்ல குடும்பத்தின் எதிர்காலம் வழி தவறிப் போகிறது. இதுதான் இந்தப் படத்தின் கரு.
மக்களிடம் இருந்தே இந்தக் கதையை எடுத்திருக்கிறேன். படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் போல, பார்த்த காட்சிகள் போல, படித்த செய்திகள் போல உணர்வார்கள்,"என்றார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் விஜயதசமியன்று தொடங்கியது.
திரைப்பட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் சசிமோகன், விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் ரமேஷ்கண்ணா, முத்துக்காளை, சாம்ஸ், இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.
விழாவுக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், மேலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











