ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக ரோஜா அறிவிப்பு

ஆரம்பத்தில் தெலுங்கு தேசத்தில் இருந்தார் ரோஜா. தமிழகத்தில் அதிமுகவுக்குக் கூட ஆதரவு தெரிவித்தார். பின்னர் தெலுங்கு தேசத்திலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் சேர முடிவு செய்தார். மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் போய்ப் பார்த்து விட்டு வந்தார்.ஆனால் சில நாட்களிலேயே அவர் உயிரிழந்து போனதால் ரோஜாவின் திட்டம் புஸ்வாணமாகியது.
இதனால் அப்செட் ஆகியிருந்த ரோஜாவுக்கு புத்துயிர் கிடைத்தது போல வந்து சேர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அவருடன் இணைந்து இப்போது செயல்பட்டு வருகிறார் ரோஜா. ஜெகன் ஆரம்பிக்கும் கட்சியில் பெரிய பொறுப்பு வாங்கி விடவும் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில் ஜெகன் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கடப்பா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
ஆந்திராவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் காரணமானவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவரது செல்வாக்கால்தான் கடந்த தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தற்போது காங்கிரசை விட்டு ஜெகன்மோகன் ரெட்டி விலகியதால் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. ஜெகனுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
அவர் என்னை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இனி எப்போது தேர்தல் வந்தாலும் ஜெகன் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று கூறினார் ரோஜா.
அனேகமாக திருப்பதி அல்லது சித்தூரில் ரோஜா போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. இதை மனதில் வைத்துதான் அவர் தீவிரமாக ஜெகனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











