தகராறு செய்கிறார்.. தயாரிப்பாளர் மீது நமீதா புகார்

நமீதாவை வைத்து தயாரிப்பாளர் திருநாவுக்கரசு அழகான பொண்ணு என்ற படத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு பூஜை போட்டார். இப்படத்தில் நடிக்க ரூ. 17 லட்சம் அட்வான்ஸும் நமீதாவுக்குத் தரப்பட்டது.
படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திடீரென இயக்குநராக பணியாற்றி வந்த காமராஜ் விலகிக் கொண்டார். இதையடுத்து இயக்குநர் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார் திருநாவுக்கரசு.
ஆனால் இதற்கு நமீதா உடன்படவில்லை. நடிக்கத் தயங்கினார். அவரை சமாதானப்படுத்தி, எனது இயக்கம் பிடித்திருந்தால் தொடர்ந்து நடித்துக் கொடுங்கள் என்று கூறி நடிக்க வைத்தார் திருநாவுக்கரசு.
இதையடுத்து கொடைக்கானலில் ஷூட்டிங் வைத்தார் திருநாவுக்கரசு. ஆனால் முதல் நாளே படப்பிடிப்புக்குப் படு தாமதமாக வந்துள்ளார் திருநாவுக்கரசு. காத்திருந்து காத்திருந்து கடுப்பான நமீதா, இயக்குநருடன் சண்டை போட்டார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நான் அவனில்லை படத்தில் பிசியாகி விட்டார் நமீதா. இடையில் கிடைத்த கேப்பில் அவரை சமாதானப்படுத்தி அழகான பொண்ணு படப்பிடிப்புக்குக் கூட்டி வந்தார் திருநாவுக்கரசு. அவரும் 2 நாட்கள் நடித்துக் கொடுத்தார். பிறகு பில்லா, அழகிய தமிழ் மகன் என பிசியாகி விட்டார்.
இந்த நிலையில் நமீதாவும், திருநாவுக்கரசும் பரஸ்பரம் புகார் கூறி தத்தமது சங்கங்களில் புகார் கொடுத்துள்ளனர்.
நமீதா கொடுத்துள்ள புகாரில், எனது வீட்டுக்கு வந்து தகராறு செய்கிறார் திருநாவுக்கரசு. ஹோட்டலுக்குப் போனால் அங்கும் வந்து பிரச்சினை செய்கிறார் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் திருநாவுக்கரசு கொடுத்துள்ள புகாரில், அட்வான்ஸ் வாங்கி விட்ட நமீதா சொன்னபடி நடித்துக் கொடுக்க மறுக்கிறார். கேட்டால், ஆள் வைத்து மிரட்டுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம், நமீதாவை விசாரணைக்கு அழைத்தது. அவரும், கூடவே நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவியும் வந்தனர். நாளை திருநாவுக்கரசையும் அழைத்து அனைவரையும் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











