நட்சத்திர இரவு நடந்த அன்று எனக்கு காய்ச்சல்..!- ஸ்னேகா

ஆந்திர வெள்ளம் சேதத்துக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு நடிகர் சங்கம் ஹைதராபாத்தில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. நடிகர் நடிகைகள் அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து ரஜினி உள்பட நடிகர்கள், நடிகைகள் பலர் பங்கேற்றனர்.
ஆனால் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளாக உள்ள நயன்தாராவும், ஸ்னேகாவும் விழாவுக்குச் செல்ல வில்லை. ஸ்னேகா தற்போது அமராவதி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாரா தற்போது அடூர்ஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இருவருமே பல தெலுங்குப் படங்களில் நடித்தவர்கள். தெலுங்கில் எக்கச்சக்க சம்பளம் வேறு பெறுகிறார்கள். இவர்களது எல்லா தமிழ்ப் படங்களும் தவறாமல் தெலுங்கில் டப்பாகிவிடுகின்றன.
எனவே இவர்கள் நட்சத்திர கலை விழாவுக்கு வராததால் கடும் கோபமடைந்தார் விழா ஏற்பாட்டாளரான பாலகிருஷ்ணா. அங்கு ஹீரோக்கள் வைத்ததுசான் சட்டம் என்பதால், பாலகிருஷ்ணா தன்னிச்சையாகவே இந்த நடிகைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
இனி தெலுங்கு படங்களில் நடிக்க இருவருக்கும் தடை விதிக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நட்சத்திர விழாவில் பங்கேற்காததற்கான காரணம் பற்றி தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு ஸ்னேகா கடிதம் அனுப்பியுள்ளார். வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டதாலேயே விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று ஸ்னேகா குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா இன்னும் பதில் அனுப்பவில்லை. அவரும் பதில் கொடுத்த பிறகுதான் என்ன செய்வதென்று முடிவு செய்வார்களாம் தெலுங்கு திரையுலகினர்.


Click it and Unblock the Notifications











