நவ்யா நாயருக்கு ஜனவரியில் கல்யாணம்

தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
தற்போது மம்முட்டியுடன் துரோணா என்ற படத்திலும், சுரேஷ் கோபியுடன் சத்கமயா படத்திலும் மட்டும் நடித்து வருகிறார்.
எனவே இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை ராஜுவும், தாய் வீணாவும் முடிவு செய்து தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தனர்.
கேரள மாநிலம் சங்கனாச்சேரி மாடையில் குடும்பத்தை சேர்ந்த நாராயண மேனன் மகன் சந்தோஷ் மேனனை நவ்யாவின் பெற்றோருக்குப் பிடித்துவிட்டது. சந்தோஷ் மேனன் மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
இருவருடைய ஜாதக பொருத்தமும் சரியாக இருந்ததால், நவ்யா நாயர்- சந்தோஷ் மேனன் இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனதால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
வருகிற ஜனவரி மாதம் இந்தத் திருமணம் நடக்கும் என நவ்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











