ஊர்வசி-மனோஜ் விவாகரத்து வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு!

கேரளாவைச் சேர்ந்த வி.பி.கவிதா ரஞ்சனி என்ற ஊர்வசிக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். குழந்தை இப்போது ஊர்வசியிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் குழந்தையை தொடர்ந்து யார் வளர்ப்பது என்பது பற்றிய பிரச்சினை எர்ணாகுளம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் கணவர் துன்புறுத்தியதால் விவாகரத்து கேட்டு கடந்த ஜூன் மாதம் சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார் ஊர்வசி.
குடும்பநல கோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதியும் அறிவுரை சொல்லிப் பார்த்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஒருமனதுடன் விவாகரத்து பெற விரும்புகிறோம் என்றும், ஆகவே, எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அதே குடும்பநல கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று காலையில் சிறிது நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிற்பகல் ஒரு மணி நேரம் சமரச தீர்வு மையத்திலும், பின்னர் நீதிபதி முன்பும் விசாரணை நடந்தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கட்கிழமை வழங்குவதாகக் கூறினார் நீதிபதி.


Click it and Unblock the Notifications











