அதுல்யா வீட்டில் கொஞ்சம் கொஞ்சமா பணத்தை திருடிய பணிப்பெண்கள்.. வசமாக சிக்கியது எப்படி!
சென்னை: காதல் கண் கட்டுதே படத்தில் க்யூட்டான அழகு பதுமையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் அதுல்யா. அந்த படத்தைத் தொடர்ந்து பல படத்தில் நடித்து வரும் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
கோலிகுண்டு கண் அழகியான அதுல்யா ரவி, காதல் கண்கட்டுதே படத்திற்கு முன்பே குறும்படங்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்துத் தான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அதுல்யா, அடுத்தது சாட்டை, கேப்மாரி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகளில் நடித்து கவர்ச்சியை தெறிக்க விட்டிருந்தார். ரசிகர்கள், இதைப்பார்த்த பலரும் மிரண்டு போனார்கள்.

நடிகை அதுல்யா ரவி: கேப்மாரி படத்தில் கவர்ச்சி காட்டியதைத் தொடர்ந்து சாந்தனுடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்த போதும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதைத் தொடர்ந்து வட்டம், கடாவர் போன்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். படவாய்ப்பு இல்லாததால்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்கள் அதில் பதிவிட்டு வாய்ப்பை தேடி வருகிறார்.
அதுல்யா வீட்டில் திருட்டு: இந்நிலையில் அதுல்யா ரவியின் கோவை வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நடிகை அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி தனது வீட்டு வேலைக்காக செல்வி என்பவரை பணியமர்த்தியிருந்தார். அவர் நீண்ட நாட்களாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்தசில மாதங்களாக பீரோவில் வைத்திருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக திருடு போவதாக விஜயலட்சுமிக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், இதுகுறித்து சரியாக தெரியாததால் புகார் கொடுக்காமல் இருந்தார்.
பணி பெண்கள் கைது: ஆனால்,கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போய் உள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் நடிகை அதுல்யா புகார் அளித்திருந்த நிலையில் அதுல்யா வீட்டில் வேலை செய்து வந்த செல்வி மற்றும் அவரது தோழியை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், அதிகமாக எடுத்தால் தெரிந்துவிடும் என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுத்தோம், அது பாஸ்போர்ட் என்று தெரியாமல் எடுத்துவிட்டோம், பின் அதை பயத்தில் கிழித்துவிட்டோம் என்று அந்த பணிப்பெண்கள் ஒப்புக்கொண்டனர்.
அண்மையில் நடிகை சாயா சிங் வீட்டில் இருந்து 66 கிராம் தங்கம் 150 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், வீட்டில் வேலை செய்த பணி பெண்ணை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக திரை நட்சத்திரங்கள் வீட்டில் வேலை செய்பவர்களே திருடுவது தொடர்கதையாகி வருவதால், பிரபலங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











