twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுகன்யா கணவர் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!

    By Chakra
    |

    Suganya
    டெல்லி: விவாகரத்து வழக்கை சென்னை கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்கக் கோரி நடிகை சுகன்யாவின் கணவர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பிரபல நடிகை சுகன்யாவுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் ஸ்ரீதருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் உள்ள பாலாஜி கோவிலில் இந்து மத சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது.

    சில மாதங்களில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சுகன்யா சென்னை திரும்பினார்.

    விவாகரத்து அளிக்கக் கோரி, கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் சுகன்யா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    இவ் வழக்கில், சுகன்யாவின் கணவர் ஸ்ரீதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'நான் அமெரிக்க குடிமகன் என்பதாலும், இத்திருமணம் அமெரிக்காவில் நடந்தது என்பதாலும், வெளிநாட்டு திருமண சட்டப்படி பதிவு செய்யப்பட்டது என்பதாலும், விவாகரத்து வழக்கை அமெரிக்க சட்டப்படி அமெரிக்க நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க அதிகாரம் இல்லை. எனவே, இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை சென்னை நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. பிறகு, அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வில், இம்மனு மீது கடந்த 2 நாட்களாக இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நேற்று ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இதனால், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுகன்யாவின் விவாகரத்து வழக்கை விசாரிக்க முட்டுக்கட்டை நீங்கியது. அவ்வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்குமாறு குடும்பநல நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஸ்ரீதர் எழுப்பிய சட்டப் பிரச்சினையை, எதிர்கால வழக்குகளில் முடிவு செய்யும் வகையில் விட்டு வைப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் இந்திய பிரஜைகளின் விவாகரத்து தொடர்பான வழக்குகளில் இனி இந்தத் தீர்ப்பு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

    கடந்த இரு நாட்களாக நடைபெற்ற விசாரணையின் போது, நடிகை சுகன்யா, நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருந்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X