திருப்பூர் படத்தில் உன்னி மாயா

பிரண்ட்ஸ் புரடக்ஷன் தயாரிக்கும் புதிய படம் திருப்பூர். தர்மராஜ் தயாரிப்பில் உருவாகும் திருப்பூர், விறுவிறுப்பாக தயாராகியுள்ளது.
இப்படத்துக்காக திருப்பூர் நகரில் 50 ஆயிரம் பொதுமக்கள் சூழ்ந்து நிற்க, ஹீரோவையும், ஹீரோயினையும் 30 அடியாட்கள் துரத்தி வருவது போன்ற காட்சியை பரபரப்பாக படமாக்கியுள்ளனர்.
திருப்பூர் மெயின் ரோடு, பாலம், தெருக்கள், கடை வீதி ஆகியவற்றில் இந்த காட்சியை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளனர். படத்தின் முக்கிய காட்சியாக இது அமையும் என்கிறார் இயக்குநர் துரைசாமி.
பொள்ளாச்சியில் நடைபெறும் ஒரு திருமண விழாவில் ஹீரோயின் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார் ஹீரோ. இதைப் பார்த்து விடும் ஹீரோயினின் தந்தை, ஆம்பளையா இருந்தா திரூப்பர் வந்து என்னோட பொண்ணோட கையைப் பிடிச்சுப் பாருடா என சவால் விடுகிறார்.
ஹீரோவும் சவாலை ஏற்று தனது நண்பர்களுடன் பழனியிலிருந்து திருப்பூருக்கு படையெடுக்கிறார். அங்கு சென்று ஹீரோயினை சந்திக்கிறார். பின்னர் தீர்த்தகிரி என்ற கொடூரமான வில்லனை எதிர்த்து எப்படி ஹீரோயின் கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.
விறுவிறுப்பான திரைக்கதையோட்டத்திற்கேற்றபடி பரபரப்பாக பின்னணி இசையமைத்துக் கொடுத்திருக்கிறாராம் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ்.
பல்வேறு புதுமுகங்கள் தலை காட்டியுள்ள இப்படத்தில் அவர்களுக்கு நடிப்புப் பயிற்சியும், ஓட்டப் பயிற்சியும் கொடுத்து நடிக்க வைத்துள்ளாராம் இயக்குநர் துரைசாமி.
உதயா, உன்னி மாயா ஜோடியுடன், காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பராக பிரபா நடித்துள்ளார். இவர்களுடன் சர்வமதி, பத்மகுமார், காதல் தண்டாபணி, மகாநதி சங்கர், எலிசபெத், வில்லனாக ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் துரைசாமி. எஸ். பாலா ஒளிப்பதிவு செய்ய, சிடி சாஜு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பழனி பாரதி பாடல்களை எழுதியுள்ளார்.
ஜூன் இறுதியில் திருப்பூர் திரையரங்களுக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications