என்னைத் தாக்கியது சாதாரண காய்ச்சல்தான் - ஐஸ்வர்யா ராய்

இந்தியாவை பாடாய்ப்படுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் ஐஸ்வர்யா ராயையும் தாக்கியதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஐஸ்வர்யா ராய் உடல் நிலை குறித்து அவரது மாமனார் அமிதாப் பச்சனும் தனது பிளாக்கில் கவலை தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் தனக்கு வந்தது சாதாரண காய்ச்சல்தான் என்றும், இதை பன்றிக் காய்ச்சல் என மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாகவும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
லாஞ்சைன்ஸ் ஸ்போர்ட்ஸ் கடிகார அறிமுக விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
படு அழகாகவும், கம்பீரமாகவும் காணப்பட்ட ஐஸ்வர்யா ராய் வழக்கமான பளிச் புன்னகையில் தேவதை போல காணப்பட்டார். ஐஸ்வர்யா ராய் வந்ததை அறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். அவர்களைப் பார்த்து ஐஸ்வர்யா உற்சாகமாக கையசைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், உங்களைப் பன்றிக் காய்ச்சல் தாக்கியதாக கூறப்பட்டதே என்று கேட்டபோது, எனது மாமனார் அமிதாப் பச்சன் அவரது பிளாக்கில், எனக்கு காய்ச்சல் வந்திருப்பதாக எழுதியிருந்தார், கவலையும் தெரிவித்திருந்தார்.
இதை சிலர் பன்றிக் காய்ச்சல் என தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். எனக்கு வந்தது சாதாரண காய்ச்சல்தான். அதிலிருந்து நான் குணமாகி விட்டேன். மீண்டும் பணிக்குத் திரும்பி விட்டேன்.
இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோருடன் பணியாற்றுவது பெருமிதமாக உள்ளது. எனக்குக் கிடைத்த அனைத்துப் புகழுக்கும், இவர்களே காரணம் என்றார்.
மாமனார் அமிதாப் பச்சனைப் போல டிவி ஷோக்களில் பங்கேற்பீர்களா என்று கேட்டபோது, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் பயங்கர பிசியாக இருப்பதால் இவற்றை மறுத்து வருகிறேன் என்றார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











