நடிப்புக்கு ப்ரீத்தி டாட்டா!

கடந்த ஆண்டு இறுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரீத்தி வர்மா. ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்குப் போன அவர் அங்கிருந்து திடீரென தலைமறைவாகி விட்டார். அவர் கடத்தி விட்டார், இவர் கடத்தி விட்டார் என ஒவ்வொரு பெயராக அடிபட்டது.
கடைசியில் ஒரு மாத சஸ்பென்ஸுக்குப் பிறகு திரும்பி வந்தார் ப்ரீத்தி. வந்தவர் தனது பெற்றோர் மீது சரமாரியாக புகார் கொடுத்தார். பாதுகாப்பு கேட்டும் விண்ணப்பித்தார்.
அதன் பின்னர் போலீஸ் மற்றும் வக்கீல்களின் பாதுகாப்பில் இருந்து வந்த ப்ரீத்தி வர்மா நடிக்கவில்லை. தன்னைத் தேடி வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி வந்தார். இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும் அவர் தீர்மானமாக கூறி வந்தார்.
இந்த நிலையில் ப்ரீத்தி வர்மா, சத்தம் போடாமல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். வளசரவாக்கத்தில் அந்த நிறுவனம் உள்ளது.
தான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று கூறும் ப்ரீத்தி வர்மா, தானுண்டு, தனது வேலையுண்டு என்று சமர்த்தாக இருந்து வருகிறாராம்.
இந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் ப்ரீத்தி வேலைக்கு சேர முக்கிய காரணம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர், முக்கியமான ஒரு அரசியல் புள்ளிக்கு வேண்டியவராம். எனவே பாதுகாப்பு கிடைக்கும் என்பதால்தான் இங்கு வந்து சேர்ந்துள்ளாராம் ப்ரீத்தி.
எங்கிருந்தாலும் வாழ்க.


Click it and Unblock the Notifications











